மீண்டும் மீண்டும் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை புலிகளை கோர்த்துவிடும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விடுதலைப் புலிகள் வழக்கு என நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி பாக்கியராசன்.சே. பதிவு செய்திருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று விடுதலைப் புலிகள் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்தனர். இலங்கை கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச செய்தியாளர் சந்திப்பிலும் ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம் ஒரு துன்பியல் சம்பவம் என விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கூறியிருந்தார்.
2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை மவுனிப்பதாக அறிவித்த பின்னர் ராஜீவ் கொலை வழக்கில் இருந்து பிரபாகரன், பொட்டம்மான் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். ராஜீவ் காந்தி படுகொலையின் சர்வதேச பின்னணி தொடர்பாக சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்புக் குழு இன்னமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது.

சீமான் சர்ச்சை பேச்சு
ஆனால் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியினர் விடுதலைப் புலிகள்தான் ராஜீவ்காந்தியை படுகொலை செய்தனர் என தொடர்ந்து பேசி வருகின்றனர். 2019-ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைப் பயங்கரவாதி, தீவிரவாதி என்கிறார்கள். காந்தியை சுட்டது கோட்ஸே, அவர் செய்தது சரி என ஒருகூட்டம் பேசுகிறது. இணையத்தில் அந்த தகவல் இருக்கிறது. அதேபோலத்தான் ராஜிவ் காந்தியை கொலை செய்ததும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் சீமான் தமது பேச்சை திரும்பப் பெற முடியாது; காங்கிரஸ் வழக்கு போட்டால் சந்திக்க தயார் என கூறியிருந்தார்.

சாட்டை துரைமுருகன் பேச்சு
அண்மையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன், சீமான் மேடையில் இருந்த போதே, நீ கருணாநிதியையும் அண்ணாதுரையையும் படிச்சு வளர்ந்தவன். நாங்கள் தலைவர் பிரபாகரனை படிச்சு வளர்ந்த பிள்ளைகள். பெரியார், அண்ணா பிள்ளைகளுக்கு பேசத் தெரியும், எழுதத் தெரியும். பிரபாகரன் பிள்ளைக்கு என்ன தெரியும்னு காங்கிரஸ்காரனுக்கு தெரியும். ராகுல்காந்திக்கு தெரியும். சோனியா காந்திக்கு தெரியும். உங்களுக்கு தெரியும்ல.. ஶ்ரீபெரும்புதூர் ஞாபகம் இருக்குதுல்ல.. அவ்வளவுதான்டா என பேசினார். இதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. நாம் தமிழர் கட்சியினரின் இத்தகைய பேச்சுகளால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் 7 தமிழர்கள் விடுதலையில் முட்டுக்கட்டை ஏற்படுகிறது என சிறையில் உள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேதனை தெரிவித்திருந்தார்.

சர்ச்சை பதிவு
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மற்றொரு நிர்வாகியான பாக்கியராசன் சே. என்பவர் தமது ட்விட்டர் பக்கத்தில் மூத்த வழக்கறிஞர் நடராஜன் மறைவு குறித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் ராஜீவ்காந்தி இறந்த வழக்கில் உலகிலேயே அதுவரை வழங்கப்படாத தீர்ப்பாக 26 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கிய அந்நேரத்தில் மேல் முறையீடு செய்ய ஐயா பழ.நெடுமாறன் மற்றும் மூத்தவர் தடா சந்திரசேகர் உள்ளிட்டோர் பலரிடம் கேட்டும் ஒருவரும் வழக்காட முன்வராத பொழுது விடுதலைப்புலிகளின் வழக்கு என்று தெரிந்தும் பல நெருக்கடிகளையும் மீறி துணிந்து ஆஜராகி பல ஆதாரங்களையும் சட்டநுணக்கங்களையும் எடுத்து வைத்து வாதாடி 19 பேரை விடுதலை செய்ய காரணமான மகத்தான மனிதர். பலருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்திருக்கிற N.நடராசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் என பதிவு செய்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் வழக்கா?
அதாவது ராஜீவ் காந்தி கொலை வழக்கை விடுதலைப் புலிகள் பொறுப்பேற்று நடத்தியது போல பாக்கியராசன் பதிவு செய்திருப்பதுதான் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகளும் கைது செய்யப்பட்டிருந்தாலும் அந்த இயக்கம் ஒருபோதும் இந்த வழக்கு விசாரணையில் தலையிட்டதும் இல்லை; உதவியதும் இல்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 தமிழருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது பழ.நெடுமாறன் தலைமையில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு ஊர் ஊராக நிதி திரட்டிதான் வழக்குகள் நடத்தப்பட்டன என்பது தமிழகம் அறிந்தது. ஆனால் நாம் தமிழர் கட்சியினர் மீண்டும் மீண்டும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகளை கோர்த்துவிடுவது பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலையை பாதிக்கவே செய்யும் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications