Furniture-ன்னா அறைகலன்- கண்டுபிடிச்சதே நான்..எழுத்தாளர் ஜெயமோகனால் சோசியல் மீடியாவில் யுத்தம்!
சென்னை: Furniture-ன் பெயரால் சமூக வலைதளங்களில் ஏராளமான ஃபர்னிச்சர்கள் உடைபட்டுக் கொண்டிருக்கின்றன. சமூக வலைதளம் இப்போது யுத்த களமாக உருமாறி நிற்பதற்கு காரணம் எழுத்தாளர் ஜெயமோகனின் அந்த ஒற்றை அறிவிப்புதான்.
எழுத்தாளர் ஜெயமோகன், தீவிர வலதுசாரி எழுத்தாளர். இந்துத்துவா கருத்துகளை தீவிரமாக முன்வைப்பவர். இதனால் பல்வேறு சர்ச்சைகளின் மையமாகவும் இருப்பவர் ஜெயமோகன். 3 ஆண்டுகளுக்கு முன்னர் மளிகை கடைகாரர் ஒருவர் புளிச்சமாவு கொடுத்த விவகாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டிருந்தார் ஜெயமோகன்.

அறைகலனும் ஜெயமோகனும்
இந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கிறது ஃபர்னிச்சர் விவகாரம். எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், Furnitureக்கு அர்த்தம் அறைகலன் என்பதை வெண்முரசுவில் பயன்படுத்தினேன். அதில் விக்சனரியில் பயன்படுத்தப்பட்டது. அந்த சொல்லை நான்தான் கண்டுபிடித்தேன் என்றார். அதாவது அறைகலன் என்ற சொல்லை தமிழுக்கு நன்கொடையாக கண்டுபிடித்து வழங்கியவர் ஜெயமோகன் என்பது அவரது கருத்து.

மனுஷ்யபுத்திரன்
அவ்வளவுதான்.. சமூக வலைதளங்களில் அமளி துமளிதான்.. திரும்பிய பக்கம் எல்லாம் இந்த ஃபர்னிச்சர் விவகாரம்தான். திமுகவை சேர்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், ஜெயமோகனுக்கு பதிலடி தரும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், Furniture க்கு ' அறை கலன்' என்ற சொல் 1994 ல் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட ஆட்சிச் சொல்லகராதி ஆறாம் பதிப்பில் இடம் பெற்றுள்ளது. ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. 1994 ல் வெண்முரசு எழுதப்படவில்லை. அறைகலன் ஜெயமோகனின் சொல்லும் அல்ல. என் வேண்டுகோளுக்கிணங்க இதைக் கண்டுபிடித்துத் தந்த பெருமாள் முருகனுக்கு நன்றிகள். நாங்கள் இவ்வளவு அலர்ட்டா இருக்க காலத்திலேயே இவ்வளவு துணிச்சலா கதை விட்டால் எப்படி? என சீறியிருக்கிறார். இதற்கான ஆதாரங்களையும் மனுஷ்யபுத்திரன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

1974-ம் ஆண்டு நூலில்..
திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை தளபதிராஜ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், அறைகலன் என்ற சொல்லை உருவாக்கியது ஜெயமோகனா?
ஆட்சிமொழிக் காவலர் என்று பாராட்டப் பெற்ற கீ. இராமலிங்கனார் 1974 -ஆம் ஆண்டு எழுதிய "ஆட்சித் துறைத் தமிழ்" என்னும் நூலின் மூலம் "அறைகலன்" என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார் ! (படம்: கீ.இராமலிங்கனார் எழுதிய தமிழில் எழுதுவோம் நால். வெளியான ஆண்டு 1978. பக்கம் 94) என பதிவு செய்துள்ளார்.

கவிஞர் மகுடேசுவரன்
கவிஞர் மகுடேசுவரன், அறைக்குள் மட்டுமே வைத்துப் பயன்படுத்தத் தக்க பொருள் அறைகலன் எனப்படும். அறைகலன் (அறையினது கலன்), அறைக்கலன் (அறையின்கண் வைக்கும் கலன்) என இருவாறும் எழுதலாம். உள்ளிருக்கும் பயன்பொருள். இச்சொல்லினைத் தமிழாய்ந்த பெருமக்கள் பலர் நெடுங்காலமாகவே பயன்படுத்தியுள்ளனர். மணவை முஸ்தபா வெளியிட்ட 'அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்' என்ற நூலில் 'அறைகலன்' என்ற சொல் பதினெட்டு இடங்களில் ஆளப்பட்டுள்ளது. இந்நூலின் முதற்பதிப்பு செப்டம்பர் 1993ஆம் ஆண்டு வெளிவந்தது என எழுதியுள்ளார். இப்படியான விவாதங்களால் சமூக வலைதள பக்கங்கள் ரத்த பூமியாகி கிடக்கிறது!












Click it and Unblock the Notifications