சங்கராச்சாரியாருக்கு வள்ளலார் சொன்ன பதில் தெரியுமா? அவர் எப்படி சனாதன ஸ்டார்? ஆளுநருக்கு எதிர்ப்பு
சென்னை: சனாதன தர்மத்தை கடுமையாக எதிர்த்த வடலூர் வள்ளலார் சனாதான தர்மத்தின் உச்சநட்சத்திரம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புகழ்ந்து பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
வடலூரில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வள்ளலாரை சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம் என புகழ்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வள்ளலார் வைதீக மதநெறிகளை சாதி, சமய வேறுபாடுகளை கடுமையாக எதிர்த்து தனி சமய வழி உருவாக்கியவர். வைதீகத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதனத்தின் உச்சநட்சத்திரம் என ஆளுநர் ரவி பேசியிருப்பது பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

வள்ளலார் யார்?: 1823-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர். 1858-ம் ஆண்டு வரை சென்னையில் வளர்ந்தார். 1874-ம் ஆண்டு வள்ளலார் மறைவெய்தினார். வள்ளலார் தாம் வாழ்ந்த காலத்தில் சாதி, சமய ஒடுக்குமுறைகளுக்கு எதிரானரவாக இருந்தார். இதனால் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய தரும சாலை, சித்தி வளாகம், சத்திய ஞான சபை ஆகியவற்றை உருவாக்கினார். வைதீக மதம், சனாதன தர்மம் ஆகியவற்றை மிக கடுமையாக நிராகரித்தவராக திகழ்ந்தவர் வள்ளலார். அத்துடன் சொற்பொழிவாளர், படைப்பாளர் என பன்முக ஆளுமை கொண்டவராகவும் வாழ்ந்து புகழெய்தவர்.
தமிழ் மொழி பற்று: வள்ளலார் தமிழ் மொழியில் புலமை பெற்றவராக திகழ்ந்தார். திருமுறைகள் உள்ளிட்ட படைப்புகளை தமிழ் நல்லுலகத்துக்கு வழங்கியவர். தமிழில் புலமை பெற்றவராக மட்டுமே இல்லமால், தமிழ் உணர்வாளராகவும் இருந்தார். சமஸ்கிருத மொழியை சங்கரச்சாரியார், அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி என கூறியபோது, என் மொழி தமிழ் அனைத்து மொழிகளுக்கும் தந்தை மொழி என வள்ளலார் கொடுத்த பதிலடி சரித்திரத்தின் பக்கங்களில் பேசிக் கொண்டிருக்கிறது.
சமூக நீதி, ஜாதி ஒழிப்பு புரட்சியாளர்:
"சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானத் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே" என பாடிய பெருமகனார் வள்ளலார்.
சனாதனத்தின் நால்வருணம் மனித குல விரோதத்தன்மையை தோலுரித்து காட்டிய வள்ளலார்,
நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம் எலாம்
பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல் வருணம்
கண்டறிவார் இலைநீ என வெளுத்தார்.
மேலும்
இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில்
எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக் கொட்டி
மண்மூடிப் போட்டு எனவும் உக்கிரமாக சாடியவர் வள்ளலார்.
சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
சோதியைக் கண்டேனடி - அக்கச்சி
சோதியைக் கண்டேனடி.
சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது - இதுவும் வள்ளலார் அருளியதுதான்!
திராவிடர் இயக்க முன்னோடி: வைதீக மதத்தை மிக கடுமையாக நேரடியாக எதிர்த்து சண்டை செய்தவர் வள்ளலார். தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கம் கரு கொள்வதற்கு முன்னரே அதன் வித்தை விதைத்துவிட்டு போன சிந்தனையாளர், சமூகப் புரட்சியாளர் வள்ளலார். வள்ளலார் சனாதனம் வலியுறுத்தும் நால் வருணம், ஜாதிய கட்டமைப்பு ஆகியவற்றை முற்றாக நிராகரித்தார். இந்த கோட்பாடுகளே தந்தை பெரியாருக்கும் திராவிடர் இயக்கத்துக்கும் அடித்தளமாகவும் அடிநாதமாகவும் இருந்தது. சனாதனத்தின் சங்கறுத்தவர் வள்ளலார்! அந்த வள்ளலாரை சனாதனத்தின் உச்சநட்சத்திரம் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது அப்பட்டமான திசைதிருப்புதல் என்பது திராவிடர் இயக்கத்தவரின் மறுப்பு.












Click it and Unblock the Notifications