தமிழ்நாட்டில் புதிதாக ஒரு மாநகராட்சி உதயம்? சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு சொன்ன பதில்!
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக ஒரு மாநகராட்சி கொண்டு வருவது பற்றி சட்டசபையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது என்பது சுலபமான வேலை கிடையாது என்றும் மக்கள் தொகை 3 லட்சத்துக்கும் குறைவாக இருக்கக் கூடாது என்பது கொள்கை விதியாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
இதனிடையே புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கை மீது முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்ற உறுதியை கொடுத்துள்ளார்.

சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 5ஆம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கேள்வி நேரத்தின் போது பேசிய புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா என்ற கேள்வியை முன் வைத்தார். அதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திமுக ஆட்சி அமைந்த பிறகு 28 நகராட்சிகள், 6 மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாநகராட்சி?
ஒரு மாநகராட்சியை உருவாக்கும் போது அதன் மக்கள் தொகை 3 லட்சம் இருக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கிறது என்றும் புதுக்கோட்டையை பொறுத்தவரை இப்போது ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 900 பேர் மட்டுமே மக்கள் தொகை இருக்கிறது எனவும் தெரிவித்தார். இதனிடையே புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் மக்கள் தொகை 3 லட்சமாக உயரும் என யோசனை தெரிவித்த அமைச்சர் நேரு அதன் பிறகு வேண்டுமானால் புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்தலாம் என்றார்.

அமைச்சர் நேரு பதில்
இதனிடையே புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளில் ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருப்பதால் அவர்களது பதவிக்காலம் முடியும் போது தான் இந்த இணைப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதே வேளையில் புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கை பற்றி முதலமைச்சருடன் கலந்துபேசி ஆவண செய்வதாக தெரிவித்தார்.

வழக்கம் போல்
முன்னதாக கேள்வி நேரத்தின் போது தாம் தயாரித்து எடுத்து வந்திருந்த புகழ்ச்சி உரைகளை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா வாசித்துக் கொண்டிருந்தார். இதனைக் கவனித்த சபாநாயகர் அப்பாவு ஆளுங்கட்சி உறுப்பினர் என்றும் பார்க்காமல் வழக்கம் போல் கேள்விக்கு வருமாறு அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications