தாம்பரம் மக்களுக்கு வந்த தங்கமான அறிவிப்பு.. சிக்கலுக்கு தீர்வு ரெடியாகுதே.. இனி ரொம்ப ஈஸிப்பா!
சென்னை: சென்னையில் மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்கு தாம்பரத்திற்கு செல்ல புதிய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நடை மேம்பாலம் திறக்கப்பட்டால் கிழக்கு தாம்பரம் பகுதி மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்கிறார்கள் மக்கள்.
சென்னையில் நுழைவு வாயிலாக ஒரு காலத்தில் விளங்கிய தாம்பரம், இன்று சென்னையின் மையப்பகுதி என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. சென்னையின் நுழைவு வாயில் இப்போது செங்கல்பட்டு என்கிற அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது.

திருவெற்றியூரில் இருந்து தாம்பரம் வரை எப்படி வளர்ந்துவிட்டதோ, அதேபோல் போல் தாம்பரம் முதல் செங்கல்பட்டு பகுதிகளும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக கடைசி 10 ஆண்டுகளில் தாம்பரம் மிக உச்சகட்ட வளர்ச்சியை சந்தித்துள்ளது- இதனால் தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் நெருக்கம் மிக அதிகமாக உள்ளது.
பல லட்சம் மக்கள் தாம்பரத்தை சுற்றி வசிக்கிறார்கள். மேற்கு தாம்பரம் பகுதிகளில் பேருந்து நிலையம் மற்றும் வங்கிகள் அமைந்திருக்கிறது என்றால், கிழக்கு தாம்பரத்தில் தான் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் பல அமைந்துள்ளன. அத்துடன் ஐடி காரிடர் பகுதியான ஓம்எஆர் வேளச்சேரியை இணைப்பதும் கிழக்கு தாம்பரம் தான். இதனால் அங்கு ஏராளமான மக்கள் வசிக்கிறார்கள்.
மேற்கு தாம்பரம் மக்கள் பலர் கிழக்கு தாம்பரம் வர ரயில்வே நடைமேம்பாலத்தை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.இதேபோல் கிழக்கு தாம்பரம் மக்களும் பேருந்து நிலையத்தை அடைய ரயில்வே மேம்பாலத்திற்கு தான் வருகிறார்கள்.
இதனால் 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், நடைமேம்பாலத்தில் ஒன்றாக செல்வதால், மிகப்பெரிய நெரிசல் ஏற்பட்டு வருகிறது,. அதனால், மேற்கில் இருந்து கிழக்கு பகுதிக்கு செல்வோரின் வசதிக்காக, தனியாக ஒரு நடைமேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. பொதுமக்கள் பலர் கோரிக்கை வைத்த நிலையில், நடைமேம்பாலத்தை ஒட்டி, நகரும் படிகளுடன் கூடிய புதிய நடைமேம்பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தாம்பரம் ரயில் நிலைய மேலாளர் எடிசன் செல்வராஜ் இதுபற்றி கூறும் போது, கிழக்கு தாம்பரம் மற்றும் மேற்கு தாம்பரம் மக்களின் வசதிக்காக புதிய நடைமேம்பாலத்தை கட்டி வருகிறோம்.இந்த மேம்பாலம் வழியாக மேற்கில் இருந்து செல்வோர், தற்போதுள்ள நடைமேம்பாலத்தில் ஏறி, டிக்கெட் கவுன்டரை ஒட்டி இடது புறம் திரும்பி, புதிய நடைமேம்பாலம் வழியாக தண்டவாளத்தைக் கடந்து, கிழக்கு தாம்பரத்திற்கு செல்ல முடியும்.
ஆனால் இந்த புதிய நடைமேம்பாலம் வழியாக கிழக்கு தாம்பரத்திற்கு மட்டுமே செல்ல முடியும். ரயில் நிலையத்திற்கு செல்வோர் ரயில்வே நடைமேம்பாலத்தை தான் பயன்படுத்த வேண்டும். இதேபோல் ரயில் நிலையத்தின் ஒவ்வொரு பிளாட்பாரத்தையும் இணைக்கும் வகையில் நகரும்படிகளை அமைத்து வருகிறோம். இப்பணிகளை, நான்கு மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications