துணை முதல்வராக்க ஆதரித்தோம்.. எங்க வாரிசுகளுக்கு மா.செ.பதவி வேணும்... சீனியர்களால் அதிரும் அறிவாலயம்
சென்னை: கட்சியிலேயே இத்தனை ஆண்டுகாலம் நீடித்து சீனியர் அமைச்சர்களாக இருந்த போதும் துணை முதல்வராவதற்கு வழிவிட்டு அமைதிகாத்தோம்; அதற்கு வெகுமதியாக எங்கள் வாரிசுகளுக்கும் மாவட்ட செயலாளர் பதவி கொடுத்துவிடலாம்தானே என சீனியர் அமைச்சர்கள் சிலர் நெருக்கடி கொடுக்க அண்ணா அறிவாலயத் தலைமை ரொம்பவே அதிர்ந்து போய்விட்டதாம்.
அண்ணா அறிவாலய கட்சியில் அதிரடி மாற்றங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. திடீரென பத்து பதினைந்து மாவட்டங்களுக்கு புதிய மா.செக்கள், பொறுப்பாளர், திடீரென ஒரே மாவட்டத்துக்கு மட்டுமான அறிவிப்பு என தினமும் கண்கொத்தி பாம்பாக கவனிக்க வைக்கிறது அறிவாலயத் தலைமை.

நினைத்து கூட பார்க்காத வகையில் எல்லாம் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதியவர்கள் களமிறக்கப்படுகின்றனர்; இதில் குறுநில மன்னர்களாக கோலோச்சிக் கொண்டிருந்த சீனியர்கள்தான் மிகவும் குமுறிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் கிடைத்தவரை லாபம்யா என ஒதுங்கிக் கொண்ட சீனியர்களும் இருக்கின்றனராம்.
அறிவாலயக் கட்சியில் அனைத்து அதிகாரத்தையும் பெயரளவுக்கு வைத்திருக்கும் ரொம்பவே சீனியரான அமைச்சரோ சற்று உரிமையுடன் தலைமையிடம் பேசியிருக்கிறார். அத்தனைக்கும் ஒத்துழைப்பு தந்தோம்.. துணை முதல்வர் பிரச்சனையில்கூட அவ்வளவு அமைதியாக, அழகாகவே வழிவிட்டோம்.. அதனால் எங்க வாரிசுக்கும் கூட ஒரு மா.செ. கொடுத்துவிட்டால் ஓகேவாகிடுவோமே.. என துண்டை விரித்துள்ளார். இதனை எதிர்பார்த்திருந்த அறிவாலயத் தலைமை, இதற்குதான் அப்போது அமைதி காத்தீங்க.. அதற்கு வெகுமானம் கேட்கிறீங்களா என சிவந்த முகத்துடன் கேட்க, உள்ளது போய்விடுமோ என அலறியபடியே வெளியேறினாராம் சீனியர்... அவருக்கே இந்த நிலைமை என்றால் நாம எப்படி கேட்பது? எனவும் சில சீனியர்கள் விழிபிதுங்கி 'தலைமை அருள்' கிடைக்க காத்திருக்கின்றனராம்.












Click it and Unblock the Notifications