ஹெல்மெட் அணிந்திருந்தாலும் 2000 ரூபாய் அபராதம்.. புதிய போக்குவரத்து விதிகளை நோட் பண்ணுங்க மக்களே
சென்னை: ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிப்பார்கள் கேள்விபட்டிருப்போம்.. ஆனால் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் 2000 ரூபாய் அபராதம் விதிக்க போகிறார்கள்.. என்னங்க நியாயம் இது என்கிறீர்களா... ஹெல்மெட்டை ஒழுங்காக அணியாமல், அதாவது சரியாக லாக் செய்யாமல் அணிந்திருந்தால் மற்றும் குறைபாடுகள் உடைய ஹெல்மெட் அணிந்திருந்தால் அபராதம் உறுதியாம்.
போக்குவரத்து விதிமீறல்கள் இந்தியாவில் சர்வ சாதாரணமாக இருந்த காரணத்தால் அபராதங்களை மத்திய அரசு 2019ம் ஆண்டு கடுமையாக்கியது. புதிய மோட்டார் வாகன சட்டம் சட்டத்தின் படி 46 வகையான போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸில் ஈடுபடுதல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. தலைகவசம் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த விதி கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு மட்டும் இன்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.1,000, இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தால் ரூ.1000, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ரூ.1000 என அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் அதிக எடையை ஏற்றுவது, சிக்னல்களில் சிவப்பு விளக்கு ஒளிரும் போது நிற்காமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு வகையிலான விதிமீறல்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்கிறார்கள். சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், பாதுகாலர் அல்லது பெற்றோருக்கு 25000 அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. போக்குவரத்து விதிமீறல்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்ட போதிலும் விதிமீறல் தொடர்கிறது.
இந்நிலையில் ஹெல்மெட் அணிந்தாலும் சோதனையின் போது அவர்கள் சரியாக அணியவில்லை என்று தெரிந்தால் 2000 ரூபாய் அல்லது 1000 ரூபாய் வசூலிக்க புதிய விதி சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாம்.. இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற போக்குவரத்து விதி அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஹெல்மெட் அணியத் தவறினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் வாகனம் ஓட்டுபவர் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், ரூ.2000 அபராதம் விதித்து இனி சலான் வழங்க போகிறார்கள்.. எதற்காக என்றால் ஹெல்மெட்டை பெல்ட்டுடன் சரியாக இணைத்துக் கொண்டு செல்லாவிட்டால் அல்லது பழுதடைந்த மோசமான ஹெல்மெட் அணிந்தால் அதற்கும் சேர்த்து 1000 ரூபாய் அல்லது 2000 அபராதம் விதிக்க போகிறார்கள்... பலர் ஹெல்மெட்டை பெயருக்கு அணிந்து செல்வதால் விபத்தை தடுக்க முடியவில்லை.. ஹெல்மெட் அணிந்தும் சரியாக அணியாத காரணத்தால் இறக்கும் நிலை உள்ளது.. எனவே தான் புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளதாம்.
இந்த புதிய விதி சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், வாகன ஓட்டிகள் முறையான ஹெல்மெட் அணிவதையும், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுவதையும் உறுதி செய்யும் என்கிறார்கள். ஹெல்மெட் அணியாவிட்டாலும் சரி, அணிந்தும் சரியாக அணியா விட்டாலும் அபராதம் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் விபத்துகளின் போது ஏற்படும் காயங்களிலிருந்து வாகன ஓட்டிகளைப் பாதுகாக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறதாம்
மேலும், புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில், விதிகளை மீறும் பெரிய வாகனங்களுக்கு, 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமாம். சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காக அதிக சுமை ஏற்றினால், டன்னுக்கு 2000 ரூபாய் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்கிறார்கள்..












Click it and Unblock the Notifications