கொரோனா தொற்று பரிசோதனையை விரைவுபடுத்த கோரிய வழக்கு.. அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: கொரோனா தொற்று பரிசோதனையை விரைவுபடுத்த கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் அடுத்த வாரம் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் இருங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல மனுவில், தமிழகத்தில் கொரோனா தொற்று முதன்முதலாக மார்ச் 7ஆம் தேதி காஞ்சிபுரத்தில் கண்டறியப்பட்டது முதல், அதன் காரணமாக 144 தடை உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது வரை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவை இரண்டாவது முறையாக நீட்டித்துள்ள மத்திய மாநில அரசுகள் கொரோனா தொற்று பரிசோதனை நடத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் விரிவுபடுத்தவோ, விரைவுபடுத்தவோ இல்லை என்றும் மனுவில் கூறியுள்ளார். குறிப்பாக கொரோனா தொற்றை விரைந்து கண்டுபிடிக்கக் கூடிய ரேப்பிட் டெஸ்ட் கருவிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக ஏப்ரல் 14ஆம் தேதி சுகாதாரத்துறை கணக்கின்படி 48 ஆயிரத்து 440 பேர் தனிமைபடுத்தபட்டு உள்ளதாக கூறும் நிலையில், 12 ஆயிரத்து 746 பேரிடம் மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களிடமோ, குடும்பத்தினரிடமோ கொரோனா தொற்று பரிசோதனை செய்யவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக நாளுக்கு நாள் கொரோனா தொற்று உள்ளவர்கள் அதிகரிக்கும் நிலையில் இருப்பதாகவும், அதனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று உள்ளவர்களிடம் தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனையை விரைவுபடுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications