சிலைகள் மீட்பு.. பொன்மாணிக்கவேலின் அறிக்கைகள் சந்தேகம் எழுகிறது.. விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு
சென்னை: சிலைகள் மீட்கப்பட்டது தொடர்பாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகள் குறித்து விசாரிக்க தனி குழுவை அமைக்கும்படி சிபிசிஐடி-க்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கொரட்டூரை சேர்ந்த சேகர் ராம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேல், நீதிமன்றத்தில் பல ஆதாரமற்ற தகவல்களை தொடர்ச்சியாக தெரிவித்து வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே அவர் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2018 ம் ஆண்டு பொன்மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த 2012 ம் ஆண்டு முதல் 2018 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தன் தலைமையிலான குழு 26 வழக்குகளை பதிவு செய்து,102 நபர்களை கைது செய்துள்ளதாகவும், 1,125 சிலைகளை மீட்டுள்ளதோடு,1,106 சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவது தடுத்துள்ளதாகவும், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 8 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், அந்த சிலைகள் உண்மையிலேயே கடத்தப்பட்ட சிலைகள் தானா என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை என தெரிய வருவதாகவும், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சம்மந்தப்பட்ட சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானது என கேட்ட போது இது தொடர்பான தகவல்களை கேட்ட போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கொடுக்க மறுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்
பொன் மாணிக்கவேல் மீட்டதாக கூறப்படும் சிலைகளை சம்மந்தப்பட்ட கோவில்களிடம் திருப்பி ஒப்படைக்காமல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திலேயே வைத்திருப்பதன் மூலம் அதன் உண்மைத் தன்மை குறித்தும் பொன்மணிக்கவேல் நீதிமன்றத்தில் அளித்துள்ள அறிக்கை குறித்தும் சந்தேகம் எழுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் நியமனம்
இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனிப்படை அமைத்து விரிவான விசாரணை செய்ய வேண்டுமென மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டனர்.