சென்னையில் ஷாக்: பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ஒருவர் கைது!
சென்னை: சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக பாஜக அலுவலகமான கமலாயம் சென்னை தி.நகர் பகுதியில் உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியினர், மூத்த நிர்வாகிகள் வந்து செல்வதால் கமலாயம் களைகட்டி இருந்தது.

பெட்ரோல் குண்டு வீச்சு
இந்த நிலையில் நள்ளிரவில் பாஜக அலுவலகமான கமலாயம் முன்பு திடீரென பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 3 மது பாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த பெட்ரோல் குண்டு கமலாயம் முன்பு விழுந்து வெடித்தது. யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்றார்.

போலீசார் விசாரணை
நள்ளிரவு நேரம் என்பதால் பாஜ.க.தலைமை அலுவலகத்தில் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் நல்லவேளையாக யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீச்சை அடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.ச ம்பவ இடத்திற்கு விரைந்த துணை ஆணையர் தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.

ஒருவரை பிடித்தனர்
மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேரமா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது ஒருவர் கமலாயம் முன்பு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

பெட்ரோல் குண்டு வீசியது ஏன்?
அப்போது அவர் நந்தனத்தை சேர்ந்த வினோத் என்பது தெரியவந்தது. வினோத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தினார்கள். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீட் தேர்வுக்கு எதிராக பேசியதால் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வினோத் கூறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பாஜக அலுவலகம் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications