சென்னையில் ஒரே பொய்யில் 20 லட்சம் சம்பாதித்த சாமியார்.. வீடு வாங்குவோருக்கு பெரிய பாடம்
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வீடு மற்றும் நிலம் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் யார் வேண்டுமானாலும், ஒன்றுக்கு உதவாத இடத்தையோ அல்லது வில்லங்கம் நிறைந்த இடத்தையே உங்கள் தலையில் கட்டக்கூடும். அதேபோல் வேறு ஒருவரின் இடத்தை உங்கள் பெயருக்கு போலிப்பத்திரப்பதிவு செய்து ஏமாற்றவும் முடியும். சென்னையில் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் நிலம், வீடு வாங்குவோர் கவனமாக இருக்க வேண்டும். ஆவடியில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலம், வீட்டு மனை, வீடு, அடுக்குமாடி வீடு ஆகியவற்றின் மதிப்பு மிக அதிகமாக உள்ளது. ஒருவர் தன் வாழ்நாள் முழுக்க சம்பாதித்து சேமிக்கும் பணத்தில் தான் வீடு என்ற ஒரு இலக்கை அடைய முடிகிறது. நகைகளை அடகு வைத்தும், சிறுசிறுக பணம் சேர்த்தும் வீடு கட்டுவதற்கு இடம் வாங்கி, பின்னர் ஹோம் லோன் போட்டு தான் வீடு கட்ட முடியும். இதுதான் எதார்த்தம். ஆனால் இப்படி கஷ்டப்பட்டு வாங்கும் வீடு அல்லது இடத்தை சரியான நபர்களிடம் போய் வாங்க வேண்டும் .

குறைந்த விலையில் வீட்டு மனை, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் அடுக்குமாடி வீடு, நம்ப முடியாத விலையில் வீடு விற்பனை போன்ற தகவல்கள் உங்களுக்கு வந்தால் ஆசையில் விழுந்து விடாதீர்கள். என்றைக்குமே ஒரு பொருள் இயல்பான விலையை விட மிகமிக குறைவாக கிடைக்கிறது என்றால், அதில் ஏதோ வில்லங்கம் இருப்பதாக அர்த்தம் என புரிந்து கொள்ளுங்கள்.
கவர்ச்சியில் விழுந்துவிட வேண்டும். ஈசி போட்டு பார்ப்பது, வழக்கறிஞரை சந்தித்து வில்லங்கம் உள்ளதா என்பதை ஆய்வு செய்து , நம்பகமான நிறுவனங்களில் மட்டும் இடம் வாங்குவது அல்லது வீடு வாங்குவது சரியானதாக இருக்கும். குறைந்த விலையில் கிடைக்கிறதே என வாய்க்கால் புறம்போக்கு நிலங்கள், சாலை ஆக்கிரமிப்பு வீடுகளை வாங்கி அவதிப்பட வேண்டாம். அதேபோல் அரசு நிலங்களை வாங்கியும் ஏமாந்து விட வேண்டாம்.. பல வகையான மோசடிகள் தினமும் நடக்கிறது. சென்னை ஆவடி பகுதியில் நடந்த மோசடி பற்றி பார்ப்போம்..
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நந்தவனமேட்டூர் நேதாஜி தெருவை சேர்ந்த 54 வயதாகும் ஜெகநாதன் என்பவர் மதுபான பார் உரிமையாளர் ஆவார். இவருக்கு திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகர் 4-வது தெருவில் வசிக்கும் 32 வயதாகும் சீனிவாசன் என்ற வாசு என்ற சாமியார் அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது சாமியார், தனக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நெருக்கமானவர் என்று கூறியுள்ளார். அவர்கள் மூலம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குறைந்த விலையில் வீடு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய ஜெகநாதன், தனது உறவினர்கள், நண்பர்களுக்கு வீடு வாங்கி தருவதற்காக ரூ.20 லட்சம் வரை சாமியார் சீனிவாசனிடம் ஜி.பே மூலமாக அனுப்பி இருக்கிறார். ஆனால் சீனிவாசன் சொன்னது போல் வீடு வாங்கி கொடுப்பதற்கான எந்தவித முயற்சியும் எடுக்காததால் சந்தேகமடைந்த ஜெகநாதன், இது குறித்து ஆவடி குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் சீனிவாசன் போலி சாமியார் என்பதும், சாமியார் வேடம் அணிந்து பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகளுடன் இருப்பதுபோல் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அதை காண்பித்து ஜெகநாதன் உள்ளிட்டோரிடம் இதுபோல் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் வரை மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் திருமுல்லைவாயல் பகுதியில் பலரிடம் எம்.பி பதவி வாங்கி தருவதாக கூறி ரூ.44 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டதாக திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் வழக்கு இருப்பதும் தெரிய வந்தது. போலி சாமியார் சீனிவாசனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர் .












Click it and Unblock the Notifications