இதுக்குத்தான் காத்திருந்தேன்.. “வா மவனே நீ கேஸ் போடு".. பாஜகவிற்கு சவால் விட்ட ஆ.ராசா.. பரபர பேச்சு
சென்னை: முடிந்தால் என் மீது கேஸ் போடுங்கள்.. சனாதனம் பற்றி பேசுவதற்கு எனக்கும் வசதியாக இருக்கும் என்று திமுக எம்பி ஆ. ராசா சவால் விடுத்துள்ளார்.
சனாதனம் பற்றி திமுக எம்பி ஆ. ராசா பேசியதில் இருந்தே தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வுகள், வேறுபாடுகள், மனுதர்மத்தில் இருக்கும் ஜாதி ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள் இருப்பதாக திமுக எம்பி ஆ. ராசா சமீபத்தில் பேசி இருந்தார்.
ஆ. ராசா தனது பேச்சில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். உச்ச நீதிமன்றம் சொல்கிறது இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.
எங்களுக்கு 5%.. திமுகவுக்கு 95%! ’இது’ தான் இப்போ நடக்குது! பழைய பாஃர்முக்கு வந்த ராஜேந்திர பாலாஜி!
என்ன சொன்னார்?
இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன்.. இந்துவாக இருக்கும் வரை நாம் பஞ்சமன். இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவர்கள்.. இந்துவாக இருக்கும் வரை நாம் விபச்சாரியின் மகன். இந்த அவலத்தை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ஆ. ராசா காட்டமாக பேசி இருந்தார். ஆ. ராசாவின் இந்த பேச்சை தமிழ்நாடு பாஜகவினர், இந்து முன்னணியினர் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.
கூட்டம்
இந்த நிலையில் திமுக சார்பாக நேற்று சமூக நீதி நாள் கூட்டம் சென்னை திருவிக நகரில் நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் பலர் கலந்துகொண்டனர். ஆ. ராசா கலந்து கொண்டு இதில் பெரியார் பற்றி பேசினார். முன்னதாக அவர் மேடையில் ஏறும் போது பெரிய மேஜை போடப்பட்டு அதில் ஏறி நின்று பேசும்படி நிர்வாகிகள் கூறினார்கள். அதற்கு ஆ. ராசா.. என்னங்க நீங்களே எனக்கு தண்டனை கொடுத்துடுவீங்க போல.. பென்ச் மேல எல்லாம் ஏற சொல்றீங்க. ஸ்கூல் மாதிரி என்று கிண்டலாககேட்டார் .
ராசா என்ன சொன்னார்?
இதை தொடர்ந்து பேசிய ஆ. ராசா, நான் பேசியதில் என்ன தவறு. எது தவறு என்று சொல்லுங்கள். நான் இல்லாத விஷயத்தையா பேசிவிட்டேன். யார் கிட்ட கதை விடுற. இதுல வேற பூச்சாண்டி. ராஜா மீது வழக்கு போடுவேன் என்று மிரட்டுகிறார்கள். நான் அவதூறாக பேசிவிட்டதாக மிரட்டுகிறார்கள். கேஸ் போடு. நான் அந்த நாளுக்காகத்தான் காத்துகொண்டு இருக்கிறேன். என் மீது கேஸ் போடு.
வா மவனே வா
வா மவனே போடு.. நீ கேஸ் போடு.. உன்னுடைய மனு நீதியை நான் படித்துக்காட்டுகிறேன். அதில் இருக்கும் குப்பைகளை நான் படித்து காட்டுகிறேன். உன் பகவத் கீதையை நான் படித்துக்காட்டுகிறேன். அதில் இருக்கும் அவலங்களை தோல் உரிப்பேன். அதை மட்டும் செய்யவில்லை என்றால் நான் கலைஞர் பிள்ளை இல்லை பார்த்துக்கோ, என்று ஆ. ராசா நேரடியாக சவால் விட்டுள்ளார்.