''நமது வரியை கொள்ளையடிக்கும் பாஜக''.. 1 ரூபாய் கொடுத்தால் 26 பைசா தான் ரிடர்ன்! -ஆ.ராசா
சென்னை: மத்திய அரசுக்கு தமிழ்நாடு 1 ரூபாய் கொடுத்தால் திரும்பக் கிடைப்பதோ வெறும் 26 பைசா மட்டுமே என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா புள்ளி விவரங்களுடன் வெளுத்து வாங்கியுள்ளார்.
ஜி.எஸ்.டி, மற்றும் நேரடி வரி மூலம் ஒவ்வொரு மாநிலமும் செலுத்திய தொகை மற்றும் அதற்கு மத்திய அரசு திருப்பி அளிக்கும் தொகையை ரூ.1 என்ற அடிப்படையில் எளிமையாக விவரித்துள்ளார். அதன்படி 1 ரூபாய் கொடுக்கும் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு திருப்பிக் கொடுப்பதோ வெறும் 26 பைசா மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு தென்னிந்திய மாநிலமான கர்நாடகா செலுத்தும் 1 ரூபாய்க்கு மத்திய அரசு வெறும் 16 பைசா மட்டுமே திருப்பிக் கொடுப்பதாக ஆ.ராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல் தெலுங்கானா செலுத்தும் 1 ரூபாய்க்கு 40 பைசாவும், கேரளா செலுத்தும் 1 ரூபாய்க்கு 62 பைசாவும், ஆந்திராவுக்கு 50 பைசாவும் மத்திய அரசாங்கத்தால் திருப்பிக் கொடுக்கப்படுகிறது எனக் கூறியுள்ளார். தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களுக்கு மட்டும் இப்படி பாகுபாடு காட்டும் மத்திய அரசு பாஜக ஆளும், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பன்மடங்கு அதிக நிதி கொடுப்பதாக ஆ.ராசா தனது பதிவில் கூறியுள்ளார்.
அதன்படி 1 ரூபாய் செல்லும் உத்தரப்பிரதேசத்துக்கு 2 ரூபாய் 2 பைசாவும், மத்தியப் பிரதேசத்துக்கு 1 ரூபாய் 70 பைசாவும், ராஜஸ்தானுக்கு 1 ரூபாய் 14 பைசாவும் மத்திய அரசு திருப்பிக் கொடுப்பதாக ஆ.ராசா தனது பதிவில் தெரிவித்துள்ளார். ஆ.ராசா எம்.பி.யின் எக்ஸ் தள பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு கண்ணில் வெண்ணையையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் மத்திய அரசு வைப்பதாக சில மாதங்களுக்கு முன்னரே அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு குறைத்துக் கொண்டே வருவது எந்த வகையில் நியாயம் என பரவலாக கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications