சின்ன கல்லு பெத்த லாபம்.. தூத்துக்குடியில் உருவாகும் அற்புதம்.. அல்லிக்குளம் - குலசேகரப்பட்டினம்!
இந்தியாவின் விண்வெளி சார்ந்த பணிகளில் பொதுவாக இஸ்ரோ மட்டுமே பணியாற்றி வந்த நிலையில், தற்போது தனியார் நிறுவனங்களும் பணியாற்ற துவங்கியுள்ளது. இதன் மூலம் இத்துறை வர்த்தகம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அந்த வளர்ச்சியின் மையமாக தமிழ்நாட்டை மாற்றும் மற்றொரு முக்கியமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மின்னணு உற்பத்தி, ஆட்டோமொபைல், பாதுகாப்புத் துறை உற்பத்தி ஆகிய துறைகளில் முன்னிலை வகித்து வரும் தமிழ்நாடு, தற்போது விண்வெளி உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

தூத்துக்குடியில் விண்வெளி தொழில்துறை பூங்கா
தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையமான IN-SPACE ஆகியவை இணைந்து, தூத்துக்குடி மாவட்டம் அல்லிக்குளத்தில் உருவாகவுள்ள விண்வெளி உற்பத்தி தொழில்துறை பூங்காவில் "ஸ்பேஸ் வெகிள்ஸ் காமன் டெக்னிக்கல் ஃபெசிலிட்டி" (Common Technical Facility - CTF) அமைப்பதற்கான முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நவீன உபகரணங்களுடன் உருவாக்கப்படும் இந்த மையம், விண்வெளித் துறைக்கான சோதனை, ஒருங்கிணைப்பு மற்றும் அசெம்பிளி வசதிகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தாண்டி தனியார் துறைக்கும் சேவை அளிக்கப்படும்.
பொதுவாக செயற்கைக்கோள், ராக்கெட் மற்றும் விண்வெளி உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தனித்தனியாக சோதனை மற்றும் தொழில்நுட்ப வசதிகளை உருவாக்க வேண்டியிருக்கும். இதற்கான முதலீடு மிக அதிகமாக இருக்கும்.
புதிய காமன் டெக்னிக்கல் ஃபெசிலிட்டி உருவாகுவதன் மூலம் பல நிறுவனங்கள் ஒரே கட்டமைப்பைப் பகிர்ந்து பயன்படுத்த முடியும். இதன் மூலம் உற்பத்திச் செலவுகள் குறைவதுடன், புதிய தொழில்நுட்பங்களை சந்தைக்குக் கொண்டு வரும் காலமும் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குலசேகரப்பட்டினம் ஸ்பேஸ்போர்ட்
இந்த திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமாக குலசேகரப்பட்டினத்தில் உருவாகி வரும் புதிய விண்வெளி ஏவுதளத்தின் அருகில் இந்த சோதனை தளம் அமைய உள்ளது.
ஏவுதளத்திற்கு அருகிலேயே உற்பத்தி, சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு வசதிகள் இருப்பதால், விண்வெளி நிறுவனங்களுக்கு செயல்பாட்டு செலவுகள் குறையும். இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகள் அதிக அளவில் தமிழ்நாட்டை நோக்கி வரக்கூடும் என தொழில்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.
உயர் திறன் வேலைவாய்ப்பு
விண்வெளி உற்பத்தி என்பது சாதாரண தொழிற்துறை வேலைவாய்ப்புகளை விட அதிக திறன் கொண்ட பொறியியல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப பணியிடங்களை உருவாக்கும் துறையாகும்.
புதிய தொழில்நுட்ப மையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, உயர் திறன் கொண்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு, விண்வெளி தொடர்பான துணைத் தொழில்களும் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications