அதிமுகவில் பிரச்சனை என்றால் அமித்ஷா தான் முடிவு செய்வாரா? டெல்லிக்கு ஏன் போறீங்க? ஆ.ராசா கேள்வி
சென்னை: "அதிமுகவில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என அமித்ஷா தான் முடிவெடுப்பாரா? அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியது ஏன்? அமித் ஷாவை செங்கோட்டையன் சென்று கள்ளத்தனமாக சந்தித்ததை அரசியலில் என்ன என்று சொல்வோம்?" எனக் கேள்வி எழுப்பினார் திமுக எம்.பி ஆ.ராசா.
இந்த நிலையில், திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், "ஓரணியில் தமிழ்நாடு குறித்து செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும். தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம் என்ற தலைப்பில் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் திமுக சென்று சேர்ந்துள்ளது.

ஆ.ராசா பேட்டி
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 2.7 கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளோம். ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களை ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் சேர்த்துள்ளோம். பிற கட்சிகளை போல் அல்லாமல் துல்லியமாக உறுப்பினர் சேர்க்கையை திமுக நடத்தி வருகிறது" எனத் தெரிவித்தனர்.
அமித் ஷா முடிவு செய்வாரா?
தொடர்ந்து பேசிய ஆ. ராசா, "தன்னுடைய இயலாமையால் ஓரணியில் தமிழ்நாடு குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். அதிமுகவில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என அமித்ஷா தான் முடிவெடுப்பாரா? அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியது ஏன்? அமித் ஷாவை செங்கோட்டையன் சென்று கள்ளத்தனமாக சந்தித்ததை அரசியலில் என்ன என்று சொல்வோம்?" எனக் கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி கவனம்
மேலும் பேசிய அவர், "நாங்கள் ஐ.சி.யூவில் இருப்பது இருக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின் இதயத்துடிப்பு உள்ளிட்டவற்றை கவனித்துக் கொள்ளச் சொல்லுங்கள். நாங்கள் திடமாகவே இருக்கிறோம். அதிமுக பாஜகவிடம் மண்டியிட்டு விட்டது. தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடகு வைக்கிறார்கள். அதிமுக தலைகுனிந்து நின்றாலும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம் என அரசியல் சாசன அமைப்புகளையும் பாஜக சிதைக்கிறது. நாடாளுமன்றத்தில் முறையாக விவாத்தித்துதான் மசோதாக்களை பாஜக நிறைவேற்றுகிறதா? மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை உள்ளிட்ட கொள்கைகளின் அடிப்படையில் திமுக கூட்டணி அமைந்துள்ளது. பல நிகழ்வுகளில் பரப்புரை தொடங்கி உள்ளோமே தவிர முறையாக திமுக இன்னும் தேர்தல் பரப்புரையை தொடங்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் - அமித் ஷா
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று 10 நாட்கள் கெடு விதித்து, கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி பேசியிருந்தார். இதனால் கோபமடைந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கினார்.
செங்கோட்டையன் ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளும் பறிக்கப்பட்டன. அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று செங்கோட்டையன் கூறிய நிலையில், அவர் டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். டெல்லி புறப்படும் முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஹரித்வாருக்கு பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார் செங்கோட்டையன். ஆனால், அன்று இரவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பினார் செங்கோட்டையன். இது சலசலப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications