என்னை விட முக்கிய சீனியர்கள் பலர் உள்ளனர்... பொருளாளர் போட்டியிலிருந்து விலக ஆ.ராசா கூறும் காரணம்..!
சென்னை: திமுக பொருளாளர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் பதவிக்கான போட்டி தொடர்பாக ஆ.ராசாவை ஒன் இந்தியா தமிழ் சார்பாக தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
மேலும், திமுகவில் தன்னை விட முக்கிய சீனியர்கள் பலர் உள்ளதாக ஆ.ராசா விளக்கம் அளித்தார்.

செப்டம்பர் 9-ம் தேதி
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே செப்டம்பர் 9-ம் தேதி திமுக பொதுக்குழு கூட உள்ளது. அதில் புதிய பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய இரு பெரும் பதவிகளுக்கும் புதிய நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பொதுச்செயலாளர் பதவியை பொறுத்தவரை துரைமுருகன் என்பது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது. பொருளாளர் பதவிக்கான போட்டி தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒதுங்கிய ராசா
திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் மிக முக்கியமானவர் ஆ.ராசா. இவர் பெயர் பொருளாளர் பதவிக்கான போட்டியில் உள்ள தகவல்கள் பரவிய நிலையில் அதனை அடியோடு மறுத்திருக்கிறார் ஆ.ராசா. இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒன் இந்தியா தமிழ் சார்பாக பேசினோம். அப்போது பேசிய அவர், பொருளாளர் பதவிக்கு தாம் போட்டியிடவில்லை என்றும் கட்சியில் தன்னை விட முக்கிய சீனியர்கள் பலர் உள்ளதாகவும் நாசுக்காக பதில் அளித்தார்.

யார் பெயர் டிக்
இந்நிலையில் பாலுவா? வேலுவா? என்பது தான் தற்போதைய நிலவரப்படி திமுகவில் உள்ள மில்லியன் டாலர் கேள்வி. இதனிடையே திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விண்ணப்பம் பெற்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவின் புதிய பொருளாளர் யார் என்பது நாளை தெரிந்துவிடும்.

முதல்முறை
கொரோனா காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேல் மந்தநிலையில் இருந்த அரசியல் களம் படிப்படியாக பரபரப்பாகி வருகிறது. திமுக வரலாற்றில் முதல்முறையாக காணொலிக் காட்சி மூலம் பொதுக்குழு நடத்தப்பட்டு அதில் பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications