போலீசாவது *****வது.. தீபாவளிக்கு 5 ஆயிரம் தரணும்..நா கூசும் வார்த்தைகளால் வியாபாரியை மிரட்டிய ரவுடி
சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கையில் சிகரெட் உருட்டுக்கட்டை சகிதமாக புகுந்த ரவுடி ஒருவர் உரிமையாளரிடம் நா கூசும் வார்த்தைகளால் பேசி மாமுல் கேட்டு மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கஞ்சா போதையில் கடைக்குள் புகுந்து மிரட்டியவர் பிரபல ரவுடியான விக்கி என்பது தெரிய வந்திருக்கிறது..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக சென்னையில் ரவுடிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக பொதுமக்களே புகார் கூறி வருகின்றனர்.

மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இப்படியாக தமிழகத்தில் ரவுடிகளின் அராஜகம் அதிகரித்திருக்கும் நிலையில் சிலர் மாமூல் கேட்டு மிரட்டி வருவதாக வியாபாரிகளும் புகார் கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மதுரையில் கும்பலாக சேர்ந்து வியாபாரி ஒருவரை ரவுடிகள் தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கடைக்குள் புகுந்த ரவுடி வியாபாரி ஒருவரை மாமுல் கேட்டு மிரட்டிய வீடியோ வெளியாகி இருக்கிறது.
சென்னை திருமங்கலம் பகுதியில் பிரபலமான சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்த விக்கி என்ற ரவுடி உரிமையாளரை மாமூல் கேட்டு மிரட்டி இருக்கிறார். போலீசாரின் சரித்திர பதிவேடு குற்றவாளியான விக்கி மீது பல்வேறு காவல் நிலையங்களில் மிரட்டல் அடிதடி கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் வந்த ரவுடி விக்கி கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கையில் கட்டையுடன் கடை உரிமையாளரையும் போலீசாரையும் தரக்குறைவான வார்த்தைகளை பேசிய விக்கி," தீபாவளி வருது.. எனக்கு 5000 தரணும்.. இல்லைனு வையி லேப்டாப் எல்லாத்தையும் அடிச்சு ஒடச்சிடுவேன்.. கடையையும் பெட்ரோல் ஊத்தி கொளுத்திப் புடுவேன்" என மிரட்டி இருக்கிறார்.
மேலும் கடைக்கு உள்ளேயே கஞ்சா சிகரெட்டை பற்ற வைத்து புகைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரவுடி விக்கி கடையில் உரிமையாளரை மிரட்டும் காட்சிகளை அங்கிருந்த ஊழியர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்திருக்கிறார். தொடர்ந்து அந்த வீடியோ வணிகர் சங்க நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..
ஆனால் பயத்தில் கடை நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் ரவுடி விக்கியை திருமங்கலம் போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்ற தகவலை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் விக்கி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகம் முழுவதும் மாமுல் கேட்டு மிரட்டும் ரவுடிகளை போலீசார் ஒடுக்க வேண்டுமென்கின்றனர் வியாபாரிகள்..












Click it and Unblock the Notifications