ஆன்லைன் ரம்மி அரக்கன்! பண இழப்பால் மீண்டும் ஒரு தற்கொலை..தெருவில் நிற்கும் குடும்பத்தின் கோரிக்கை..!
சென்னை: சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து கடனாளியானவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனியாவது ஆன்லைன் ரம்மிக்கு அரசு தடைவிதிக்க ஆவனம் செய்ய வேண்டும் என உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணத்திற்கு ஆசைப்பட்டு அல்லது வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என நினைத்து அறியாமையில் மூழ்கி மன நோயாளிகளாக மாறி தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
விட்டதை பிடித்து விடலாம் என நினைத்து கடனுக்கு மேல் கடன் வாங்கி கடனில் மூழ்கி வேறு வழியின்றி தற்கொலை முடிவை தேர்வு செய்யும் அவலநிலை நீடிக்கத்தான் செய்கிறது. அதேபோல் ரம்மி விளையாட கொலை, கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு
சென்னை போரூர் விக்னேஸ்வரா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபு(39), இவரது மனைவி ஜனனி(என்ற) இந்து(36), குடும்பத்துடன் வசித்து வந்த பிரபு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் . இந்த நிலையில் கொரோனா காலத்தில் நிறுவனத்தில் வேலை பறிபோன நிலையில் கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அதேசமயத்தில் செல்போனில் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடுவார் என கூறப்படுகிறது.

கணவன் தற்கொலை
இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று அவரது மனைவி வெளியே சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது பிரபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன பிரபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

15 லட்சம் பணம் இழப்பு
இதில் பிரபு ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் ரூ.15 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளதாகவும் இதனால் கடந்த ஒரு வருடமாக வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். கிரெடிட் கார்டு மூலமாக கடன் பெற்றும் வீட்டு கடனை அடைக்க வைத்திருந்த பணம் என அனைத்தையும் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சுமார் 15 லட்சம் வரை இழந்துள்ளார்.

உறவினர்கள் கோரிக்கை
இதுகுறித்து அவரது மனைவிக்கு தெரியவரவே அவர் வாங்கிய கடனை அடைக்க வங்கியிலிருந்து அழுத்தம் கொடுத்ததால் அந்த பணத்தை செலுத்தி விட்டு வருவதற்காக நேற்று சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது பிரபு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கும் செல்லாமல் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பிரபுவின் மனைவி போரூர் போலீசில் புகார் அளித்துவிட்டு இது போன்ற ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications