போதை மாத்திரை விற்பனை! தமிழகத்திற்கு குஜராத் கும்பல் குறி.. கட்டம் கட்டி தூக்கிய நாமக்கல் போலீஸ்!
சென்னை: தமிழ்நாட்டை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த குஜராத்தை சேர்ந்த இளைஞரை, நாமக்கல் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டை குறி வைத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டார்? அவரை பின்னாலிருந்து இயக்குபவர்கள் யார்? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் போதை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக கஞ்சா புழக்கம் அதிகமாக இருந்த நிலையில், அதனை ஒழிக்க தமிழக காவல்துறை சில ஆதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதனால், கஞ்சா விற்பனை முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும், மறுபுறம் போதை மாத்திரைகள் புழக்கம் காவல்துறைக்கு புதிய தலைவலியை உருவாக்கியது.

சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் சில உள் மாவட்டங்களிலும் போதை மாத்திரை விற்பனை கொடிக்கட்டி பறந்தது. இப்படியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கவுதம் எனும் இளைஞரை, போதை மாத்திரை விற்பனை வழக்கில் போலீசார் கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
கவுதம், ஆரம்பத்தில் ஈரோட்டில் தங்கியிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரத்குமார், அசோக் ஆகியோரிடமிருந்து போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்து வந்திருக்கிறார். இதில் அதிக லாபம் பார்த்த கவுதம், தானே தனியாக போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறார். இது குறித்து பரத்குமார், அசோக்கிடம் அணுகியபோது, அவர்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்த சித்திக் சவுத்திரி என்பவரின் தொடர்பை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த தொடர்பு, போதை மாத்திரைகள் விற்பனையில் கவுதமை வேறு ஒரு கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. சவுத்திரி தமிழ்நாட்டை குறி வைத்து போதை மாத்திரை சப்ளை செய்து வந்திருக்கிறார். தனது விற்பனை அதிகரிக்க ஆட்களை தேடி வந்தபோதுதான் கவுதம், இவரை அணுகியுள்ளார். இப்படியாக இருவருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த தொடர்பை பயன்படுத்தி முன்பை விட அதிக அளவு போதை மாத்திரைகளை கவுதம் வாங்கியுள்ளார். வாங்கிய மாத்திரைகளை விற்பனை செய்ய 12 பேரை தனக்கு கீழே நியமித்திருக்கிறார்.
இவர்களது குறி கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள், வேலையற்ற இளைஞர்கள்தான். கவுதம் கொடுத்த தகவலின் அடிப்படையில் 12 பேரையும் நாமக்கல் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் கவுதமின் வீட்டை சோதனை செய்தபோது ஏராளமான போதை மாத்திரைகள் கிடைத்திருக்கிறது. அதேபோல, சோதனை மேற்கொள்ளப்பட்ட நாளில் கவுதமுக்கு கொரியர் ஒன்று வந்திருக்கிறது. அதில், 5000 போதை மாத்திரைகள் இருந்திருக்கின்றன.
எனவே, இதனை அனுப்பிய சவுத்திரியை கைது செய்த நாமக்கல் போலீசார் திட்டமிட்டனர். திட்டத்தின்படி, நாமக்கல்லிலிருந்து கோவை சென்ற பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார், அங்கிருந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகருக்கு சென்றனர். அங்கு சவுத்திரியின் செல்போன் எண்ணை டிராக் செய்து, இன்று அதிகாலை 3 மணியளவில் அவரை கைது செய்திருக்கின்றனர்.
இந்த கைது நடவடிக்கையின்போது, உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் சிலரை சவுத்திரி தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார். ஆனால், அதற்குள் அவரை விமான நிலையம் அழைத்து வந்து, அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு போலீசார் கொண்டு வந்திருக்கின்றனர். சவுத்திரி ஏன் தமிழ்நாட்டை குறி வைத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டார்? அவரை பின்னாலிருந்து இயக்குபவர்கள் யார்? போன்ற விவரங்கள் அடுத்த கட்ட விசாரணையில்தான் தெரிய வரும்.
போதை மாத்திரை விற்பனையை தடுக்க சினிமா பாணியில் தமிழக காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றியுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications