ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கிய பொறுப்பு.. நிர்மல் குமார் - ராஜ்மோகன் உள்பட பலருக்கும் பதவி தந்த தவெக
சென்னை: விசிகவில் இருந்து விலகி தவெகவில் இன்று இணைந்த ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் பிரபல பேச்சாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பொறுப்புகளை நடிகர் விஜய் வழங்கி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதுதவிர லயோலா மணி உள்பட இன்னும் பலருக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுபற்றிய முழு விபரம் வருமாறு:
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். தற்போது கட்சிக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றன. கட்சி சார்பில் மொத்தம் 120 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் நியமனங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெகவின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதோடு புதிய மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பை அவர்வெளியிட்டு வருகிறார்.
சென்னையில் இன்று தவெகவில் முக்கிய பிரமுகர்கள் விஜய் முன்னிலையில் இணைந்தனர். அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் பிரபல பேச்சாளரும், யூடியூபருமான ராஜ்மோகன் ஆகியோர் இன்று தவெகவில் இணைந்தனர். கட்சி அலுவகத்துக்கு வந்த 3 பேரையும் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரேவற்றார். அதன்பிறகு 3 பேரும் கட்சியில் அதிகாரப்பூர்வமாக விஜய் முன்னிலையில் இணைந்தனர்.
கட்சியில் இணைந்த 3 பேருக்கும் உடனடியாக தவெகவில் பதவி என்பது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதவ் அர்ஜுனா தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தவெகவில் மிகவும் முக்கிய பொறுப்பாகும். ஏனென்றால் தேர்தல் சார்ந்த பணிகளை ஆதவ் அர்ஜுனா மேற்கொள்ள உள்ளார். அதாவது வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம், அவர்களுக்கான பயிற்சி பட்டறை, தேர்தலுக்கு கட்சி தொண்டர்களை தயார் செய்யும் பணியை ஆதவ் அர்ஜுனா மேற்கொள்ள உள்ளார்.
ரசிகர் மன்றமாக, மக்கள் மன்றமாக உள்ள ரசிகர்கள் தவெகவின் தொண்டர்களாக மாறி உள்ள நிலையில் அவர்களை ஒருங்கிணைத்து பணி செய்யும் வகைகளை ஆதவ் அர்ஜுனாவுக்கு இந்த பொறுப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தல் தொடர்பான பணியை மேற்கொண்ட அனுபவம் ஆதவ் அர்ஜுனாவுக்கு உள்ளது. பிரபல அரசியல் வியூகரான பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தமிழக அரசியல் களத்தை பற்றி அவர் அறிந்து வைத்துள்ளார். கடந்த 2016, 2019 மற்றும் 2021 என தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் திமுகவின் அரசியல் வியூக வகுப்பாளர்களுடன் சேர்ந்து ஆதவ் அர்ஜுனாவும் செயல்பட்டார்.
'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' அமைப்பை தொடங்கியிருந்தார். அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சியில் துணை பொதுச்செயலாளராக செயல்பட்டார். விசிக இப்போது திமுக கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் தான் விசிகவில் இருந்து கொண்டே திமுகவை கடுமையாக ஆதவ் அர்ஜுனா விமர்சித்தார். இதனால் அவர் விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து விலகிய நிலையில் இப்போது தவெகவில் சேர்ந்து முக்கிய பதவியை பெற்றுள்ளார்.
அதேபோல் அதிமுகவில் இருந்து விலகிய தவெகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமாருக்கு கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே பாஜக மற்றும் அதிமுகவில் சமூக வலைதள பிரிவில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். இந்நிலையில் தான் அவருக்கு தவெகவில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தவெகவின் சமூக வலைதள பிரிவு சார்ந்த பணிகளை அவர் மேற்கொள்ள உள்ளார்.
அதேபோல் பிரபல யூடியூபரும், பேச்சாளருமான ராஜ்மோகன் தவெகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒரு கட்சி என்றால் அதற்கு கொள்கைகள் என்பது மிகவும் முக்கியம். அதோடு கட்சியில் இருக்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் வரை கொள்கைகள் என்பது சென்றடைய வேண்டும். அப்போது தான் கட்சி கொள்கை ரீதியாக வலுவாக நிலைத்து நிற்கும். அந்த வகையில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி ராஜ்மோகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் சிறந்த பேச்சாளர்களாக அறியப்படும் நிலையில் அவர் இனி தவெகவின் கொள்கைகளை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்ள உள்ளார்.
இவர்கள் தவிர லயோலா மணி என்ற ஏ மணிகண்டன், பேராசிரியர் ஏ சம்பத் குமார், கேத்ரின் பாண்டியன் உள்ளிட்டோருக்கு கழக கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவியும், எஸ். வீரவிக்னேஷ்வரனுக்கு செய்தி தொடர்பாளர் பதவியும், எஸ் ரமேசுக்கு இணை செய்தி தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆர் ஜெயபிரகாஷ் என்பவருக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் பதவியும், ஏ குருசரண், ஆர்ஜே ரஞ்சன் குமார் ஆகியோருக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு ஆர் குருமூர்த்திக்கு சமூக ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும், ஆர் ராம்குமார், பி வெங்கடேஷ், ஆர் நிரேஷ் குமார், எஸ் அறிவானந்தம் ஆகியோருக்கு சமூக ஊடகப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் 2026 சட்டசபை தேர்தல் பாய்ச்சலுக்கு முழுவீச்சில் தவெக தயாராகி வருகிறது என்பது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications