அதிமுக பக்கம் ஆதவ் அர்ஜுனா..? பிரசாந்த் கிஷோர் என்ட்ரி! தடுமாறும் திருமா.. திருச்சி சூர்யா ஸ்கூப் நியூஸ்
சென்னை: அதிமுக கூட்டணியில் விசிக இணைப்பதற்கான முயற்சிகளில் ஆதவ் அர்ஜுனா மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்று முன்னாள் பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா ஒரு அதிரடியான கருத்தை தெரிவித்திருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் சில மாதங்கள் முன்பாக இணைந்த ஆதவ் அர்ஜுனா, 'ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு' என்று ஒரு திரியைக் கடந்த மாதம் கொளுத்திப் போட்டார். அதையொட்டி அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. இதே வேகத்தில் அவர் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் துணை முதல்வராகப் பதவிக்கு வர இருந்த உதயநிதியை மறைமுகமாகச் சீண்டினார்.

அவர், '4 ஆண்டுகள் முன்னதாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தவர் துணை முதல்வராகலாம். 40 ஆண்டுகளாக அரசியல் களத்தில் உள்ள திருமாவளவன் ஆகக்கூடாதா?' என்று கேள்வி எழுப்பினார். அது மறுபடியும் திமுக மற்றும் விசிக கூட்டணி இடையே மனக் கசப்பை ஏற்படுத்தியது. திமுக எம்பி அ. ராசா, 'திமுக கூட்டணியை உடைக்க பாஜக மறைமுகமாக முயல்கிறது. ஆதவ் மீது திருமா நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறேன்' என்று பேசி இருந்தார்.
அதன்பின்னர் திருமாவளவன் அளித்த விளக்கத்திற்குப் பின்பு இந்தச் சர்ச்சை கொஞ்சம் அடங்கியது. ஆனால், இப்போது மீண்டும் திமுக அரசை நேரடியாக ஆதவ் அர்ஜுனா விமர்சித்து வருகிறார். குறிப்பாக சாம்சங் தொழிலாளர் பிரச்சினையில் அவர் திமுகவின் நடவடிக்கையைக் காட்டமாக விமர்சித்து வருகிறார், ஆதவ் வெளியிட்ட ஒரு எக்ஸ் தள பதிவில், "பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்காக அரசு காட்டும் முக்கியத்துவம் அங்கு பணிபுரியும் நம் தொழிலாளர்கள் விசயத்திலும் அரசு காட்டவேண்டும்.தொழிலாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே சுமுகமான தீர்வை எட்ட அரசு வழிவகை செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, காவல்துறையை வைத்து தொழிலாளர்களை அச்சுறுத்துவது என்பதோ அவர்களைக் கைது செய்வது என்பதோ இந்த பிரச்சனைக்குத் தீர்வாகாது" என்று கூறியுள்ளார்.

இதேபோல சென்னை மெரினாவில் நடந்த விமானப் படை சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக , "எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாகப் பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும்" என்று எழுதி இருந்தார். ஆக, விசிக துணைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா ஒரு குரலில் பேசும்போது திருமா அதை வேறு குரலில் பேசுகிறார். இந்த முரண்பாடு கட்சிக்குள் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் விசிக உட்கட்சிக்குள் ஒரு கோஷ்டி பூசல் உருவாகி வருகிறது என்று கூறுகிறார் திருச்சி சூர்யா.
அவர் ஒரு யூடியூப் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இதே நிலை தொடர்ந்தால் விசிக இரண்டாக உடையலாம் என்றும் கூறியுள்ளார். சூர்யா அளித்துள்ள பேட்டியில், "சாம்சங் தொழிலாளர் பிரச்சினையில் ஆதவ் அர்ஜுனா மிகக் கடுமையாக திமுகவை விமர்சிக்கிறார். ஆனால், திருமாவளவன் கொஞ்சம் மென்மையாகப் பேசுகிறார். அதைப் பற்றி திருமாவிடம் கேட்டால், பூசிமெழுகிப் பேசுகிறார். அவர் பேசும் தொனிதான் வேறு. கருத்து ஒன்றுதான் என்கிறார் திருமா. இதனால் கட்சிக்குள் ஒரு மனக்கசப்பு நிலவுகிறது. பணம் பலம் கொண்ட அர்ஜுனை அடக்காமல் இருக்கிறார் திருமா என்று ஒரு குரல் ஒலிக்கிறது.
விசிகவுக்குள் நிலவுகின்ற சூழலைப் பார்த்தால், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் அக்கட்சி இரண்டாக உடையும் என்றே சொல்லப்படுகிறது. விசிக 4 எம்.எல்.ஏக்களில் ஆளூர் ஷாநவாஸ் மட்டும்தான் இந்த விவகாரம் குறித்துப் பேசுகிறார். மற்றவர்கள் அதிகம் பேசுவதில்லை. ஷாநவாஸ் 'விசிகவுக்குத்தான் நாங்கள் விசுவாசமாக இருப்போம்' என்கிறார். இன்றைய சூழ்நிலை அப்படி. ஆகவே இப்படிச் சொல்கிறார். இப்படிப் பேசியவர்கள் பலர் கட்சி மாறியதை நாம் பார்த்திருக்கிறோம்.
அதிமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தேவை எனநினைத்து எடப்பாடி பழனிசாமி பலமுறை தூது அனுப்பினார். பிரசாந்த் தேர்தல் பரப்பில் இருப்பதால் எடப்பாடியை முன்பு கண்டுகொள்ளவில்லை. மேலும் கிஷோர் இன்னும் திமுக தொடர்பில்தான் இருக்கிறார். சுனில்தான் அதிமுகவுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து வந்தார். ஆனால், அது தொடர் தோல்வியைக் கொடுத்தது. ஆகவே, எடப்பாடி 90% பிரசாந்த் கிஷோரை நெருங்கிவிட்டார். இதற்கான பேச்சு வார்த்தையை மார்ட்டின் லாட்டரி மூலம்தான் நடந்துள்ளது. இதை மனதில் வைத்துத்தான் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா திமுக கூட்டணியை உடைக்கும்படி பேசி வருகிறார். அதை திருமாவினால் கண்டிக்க முடியவில்லை.
காரணம், மக்களவைத் தேர்தலுக்காக 100 கோடியும் விசிக மாநாட்டுக்காக 100 கோடியையும் ஆதவ் அர்ஜுனா கொடுத்திருக்கிறார். அதற்கான உத்தரவாதமாக பொதுத் தொகுதியில் ஒரு எம்பி சீட் என்பது பேச்சு. ஆனால், சீட்டு கொடுக்க முடியவில்லை. ஆதவ் செலவு செய்துள்ளார். அந்தத் தைரியத்தில் வேகமாகப் பேசுகிறார். இப்போதுதான் விசிக மாநிலக் கட்சிக்கான அங்கீகாரத்தைத் தேர்தல் ஆணையத்தில் பெற்றுள்ளது. கட்சி வளர்ந்து வரும் நேரத்தில் ஆதவ் பேச்சைக் கேட்டு அவர் நடந்தால் நஷ்டம் யாருக்கு? கடந்த 25 ஆண்டுகளாகக் கட்சி எந்தவித பொருளாதார பலமும் இல்லாத காலத்திலிருந்து திருமாவுடன் பயணித்தவர்களே ஆதவ் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏன் இவ்வளவு இடம் கொடுக்கிறார் என்று கேட்கிறார்கள்.
உதயநிதிக்கு துணை முதல்வராகும் தகுதி இல்லை என்று சொன்ன ஆதவ் அர்ஜுனா மீது இதுவரை திருமா நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி எனில் அந்தக் கருத்தை ஆதரிக்கிறீர்களா? ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று திருமா பேசிய வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டவர் ஆதவ். அதை நீக்கியவர் எம்பி ரவிக்குமார். மறுபடியும் வன்னி அரசு அதில் உள்ளே வருகிறார். தடுக்கப்பட்ட வீடியோ மீண்டும் வெளியாகிறது. அதில் என்ன நிலைப்பாடு எடுப்பது என அறியாமல் திருமா தடுமாறுகிறார்.
இங்கேதான் மோதல் எழுகிறது. நான் ஆதவ் அர்ஜுனா வட்டாரத்தில் இது பற்றி விசாரித்த வரை சில தகவல்கள் கிடைத்தன. அவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் சீட்டு கேட்பார். அதற்காக சில கோரிக்கைகளை வைப்பார். திருமா மூலம் அது நடக்காது எனும் பட்சத்தில் அவர் விசிகவை விட்டு வெளியேறி, அதிமுகவில் இணைவார் என்கிறார்கள். ஒருவேளை இப்படி நடக்காமல் திருமாவை அதிமுக கூட்டணிக்கு ஆதவ் நகர்த்திக் கொண்டு போனால் விசிக இரண்டாக உடையலாம். இப்போதைக்கு இதுதான் நிலை. விஜயகாந்த் இருந்தபோது தேமுதிகவில் முக்கிய நிர்வாகிகளாக 18 பேர் இருந்தார்கள். ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவை விஜயகாந்த் கடுமையாக எதிர்த்தார். அந்த 18 பேரை தூக்கினார்கள். அதனால் தேமுதிக என்ற கட்சியே காணாமல் போனது.
அதேதான் கமல்ஹாசன் கட்சியிலும் நடந்தது. பொருளாதார ரீதியாக அவரை பேக் அப் செய்ய 4 பேர் இருந்தார்கள். அவர்களை திமுக உடைத்தது. இறுதியில் கமல்ஹாசனே திமுக பக்கம் வரவேண்டிய நிலை வந்தது. இதேநிலைதான் மதிமுகவுக்கு முன்பு நடந்தது. இன்று வைகோ திமுக பக்கம்தான் இருக்கிறார். இப்போது சீமான் கட்சியை உடைக்க தொடங்கி இருக்கிறார்கள். முன்பு டிடிவி தினகரன் பவர் பாலிடிக்ஸ் செய்தார். அவர் கட்சியை உடைத்து செந்தில் பாலாஜி, தங்கத் தமிழ்ச்செல்வனை இழுத்தார்கள். இப்போது தினகரன் தடுமாறுகிறார்.
திமுக இப்படி கட்சியை உடைப்பதில் வலிமையாகச் சக்தி. யார் தங்களை எதிர்க்கிறார்களோ அந்தக் கட்சியில் உள்ள இரண்டாம் கட்டத் தலைமையை இழுத்துவிடுவதை வழக்கமாகச் செய்து வருகிறது திமுக. அதில் அனுபவம் பெற்ற கட்சி திமுக. ஜக்கி வாசுதேவ் மீது ரெய்டு விட தெரிந்த மாநில அரசுக்கு மார்ட்டின் லாட்டரி மீது ரெய்டு விட முடியாதா என்ன? மருமகனால் நாளை மாமனாரும் காட்டிக்கொள்வார். ஆகவே, கட்சிகளை உடைப்பதில் திமுக பக்கா எக்ஸ்பர்ட். எனவே திமுக கூட்டணியிலிருந்து திருமா வெளியேறினால் விசிகவை சிதறடித்துவிடுவார்கள்" என்கிறார்












Click it and Unblock the Notifications