திமுக அரசுக்கு எதிராக ஆதீனங்கள்- கர்நாடகா பாணியில் அரசியலுக்குள் இழுத்துவிடப்படும் மடாதிபதிகள்?
சென்னை: தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் சுமக்கும் விவகாரம் மெல்ல மெல்ல தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிரான அரசியலாக உருமாறி வருகிறது. தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம், மன்னார்குடி ஜீயர் என அடுத்தடுத்து மடாதிபதிகள் திமுக அரசை விமர்சித்து வருகின்றனர்.
இந்தியாவில் மதம் சார்ந்த அரசியல் எடுபடாத மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்து வருகிறது. நாடு விடுதலைக்கு முன்னரே சமூக நீதி கோட்பாடு வேர்பிடித்து இருந்த மண் தமிழகம். இதனால் இங்கே ஆதீனங்கள், மடாதிபதிகள், வாக்கு வங்கி அரசியலில் செல்வாக்கு செலுத்த முடியாதவர்களாகவே இருந்தனர்.
இன்னும் ஒருபடி மேலே போய் கடவுளே இல்லை என்று சொன்ன தந்தை பெரியாரும் பேரறிஞராக திகழ்ந்த குன்றக்குடி அடிகளாரும் ஒரே மேடையில் மக்கள் நலனுக்காக குரல் கொடுத்ததும் கை கோர்த்ததுமான நிகழ்வுகள் தொடருகின்றன. பகுத்தறிவு பேசும் திராவிடர் இயக்க மேடைகளில் மொழி, இனம் சார்ந்து ஆன்மீகவாதிகள் குரல் கொடுக்க கை கோர்த்தும் வந்துள்ளனர்.

வட இந்தியா கலாசாரம்
ஆனால் வட இந்தியாவில் மதம் சார்ந்த ஓட்டு அரசியல் என்பது கடந்த 30,40 ஆண்டுகளாக ஆழபுரையோடி கிடக்கிறது. தேர்தல் காலங்களில் மதம் சார்ந்த பிரச்சனைகள் உயிரைக் குடிக்கும் கொடூரங்களாக உருமாறி போவதும் தொடருகிறது. தேர்தல் அரசியலில் மதம் என்பது வட இந்தியாவில் பிரதான பங்களிப்பு செய்கிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகாவில் மடாதிபதிகள் செல்வாக்கு ஓட்டு அரசியலில் வெட்ட வெளிச்சமானது.

கர்நாடகா மடாதிபதிகள் அரசியல்
தேர்தல் நெருங்கிவிட்டாலே லிங்காயத் மற்றும் ஒக்கலிகா ஜாதிகளின் மடாதிபதிகளை அரசியல் கட்சிகள் சார்ந்திருப்பதை கண்கூடாக பார்க்க முடியும். கர்நாடகாவில் மடாதிபதிகள் சொல்லை அரசியல்வாதிகளும் மக்களும் ஏற்றுக் கொள்கிற போக்கு இருக்கிறது; அதனால் அவர்கள் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருக்கின்றனர். லிங்காயத்து மடங்கள் ஆதரவால் எடியூரப்பாவை ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் வயது அதிகமாக இருந்தாலும் பாஜக தலைமையால் நீக்க முடியவில்லை. இன்னொரு லிங்காயத்து பொம்மையை காண்பித்துதான் மடங்கள் ஒப்புதலை பாஜக பெற முடிந்தது.
Recommended Video

மதவாத அரசியல்
தமிழகத்தில் ஆதீனங்கள், மடாதிபதிகள் என்பவை பல நூறு ஆண்டுகளாக இருக்கின்றன. ஆதீனங்கள் என்பவை இறை பணிகளுக்காக தமிழ் பணிகளுக்காக என்று தொடங்கப்பட்டாலும் காலம் அதனை மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தியே வைத்திருக்கிறது. அடிமைத்தளைகளை தகர்த்து எறிந்து மனிதனுக்கு மனிதன் சமம் என்கிற மகத்தான சமூக நீதியை பேசுகிற தமிழ் நிலத்தில் சில, ஆதிக்க மனோபாவ ஆதீனங்களும் மடாதிபதிகளும் பேசுபொருளாக, கவனிப்பு பொருளாக இருக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகத்தான் மதவாத அரசியலை வேர்கொள்ள வைக்க முடியுமா? என்று வெந்நீரில் விதையை ஊன்றி விருட்சத்துக்கு இலவு காத்திருக்கும் சிலர் முயற்சிக்கின்றனர். இதன் எதிரொலியாகத்தான் சோடா பாட்டில் வீசுவோம் என்பது தொடங்கி இன்றைய அமைச்சர்கள் நடமாட முடியாது என்கிற வாய்க்கொழுப்பு வரை நீண்டிருக்கிறது. மதவாத சக்திகளின் இடைவிடாத முயற்சிகளால், சமூக நீதி என்பதே ஒவ்வாமை என அலறுகிற சக்திகளால் இப்போது தருமபுர ஆதீன விவகாரம் என்பது இன்னொரு மதவாத அரசியலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அரசுக்கு எதிராக ஆதீனங்கள்
21-ம் நூற்றாண்டிலும் கூட சகமனிதனை மனிதன் பல்லக்கில் தூக்கி வலம் வருவேன் என அடம்பிடிக்கிறார்கள்.. பழுத்த ஆன்மீகவாதியான தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாரன் போன்றவர்கள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் திராவிட அரசியல் மீது தீராத வன்மம் கொண்டவர்கள் இப்போது ஆளும் திமுக அரசுக்கு எதிராக இத்தகைய கொத்தடிமைத்தனத்தை நியாயப்படுத்துகிற கூச்சல்களில் ஆதீனங்களையும் கோர்த்துவிடுகின்றனர். மதவாத புதை குழி அரசியலுக்குள் தாங்கள் தள்ளிவிடப் படுகிறோம் என்பதை உணராமலேயே ஆதீனங்கள் மைக் கிடைத்தால் போதும் என பேசிவருவது தமிழகத்தின் ஆரோக்கியமான அரசியலை அடியோடு ஆழ குழிதோண்டி புதைப்பதாகும் என்கின்றனர் ஜனநாயக சக்திகள்.












Click it and Unblock the Notifications