இன்று ஆடிக்கிருத்திகை.. தமிழ்நாடு முழுவதும் முருகன் கோவில்களில் குவியும் பக்தர்கள்.. ஸ்பெஷல் இதுதான்
சென்னை: ஆடிக்கிருத்திகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பக்தர்கள் காலை முதலே முருகன் கோயில்களில் குவிந்து வருகின்றனர். சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்து வருகிறது. இந்த நாளின் சிறப்பு, வழிபாடு நடத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனுக்கு உகந்த நட்சத்திரங்களாக கார்த்திகை, பூசம் மற்றும் விசாகம் ஆகிய மூன்று நட்சத்திரங்கள் சொல்லப்படுகின்றன. ஆடி மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரம் ஆடிக்கிருத்திகையாக கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை நட்சத்திரத்தை போற்றும் வகையில் ஆடிக்கிருத்திகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்த முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் விதமாக இந்த கார்த்திகை நட்சத்திரத்தை ஆடிக்கிருத்திகையாக கொண்டாடப்படுகிறது.
ஆடிக் கார்த்திகையில் ஆறுமுகனை வழிபட்டால் நன்மை தேடி வரும் என்று சொல்வார்கள். அதுமட்டுமின்றி கர்ம வினைகள் நீங்கும், செவ்வாய் தோஷம் அகலும், திருமணத் தடைகள் நீங்கும். சொந்த வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்றவை ஏற்படும் என பெரியவர்கள் சொல்வது உண்டு. இப்படி சிறப்பு மிகந்த ஆடிக்கிருத்திகை தினம் இன்று வந்துள்ளது.
ஆடிக்கிருத்திகை என்றாலே திருமண வரம், குழந்தை வரம் உள்ளிட்ட பல வேண்டுதல்களுக்காக விரதம் இருப்பது பக்தர்களின் வழக்கம் ஆகும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் விரதம் இருப்பது பல பக்தர்களுக்கு ஏதுவான நாளாக அமைந்துள்ளது. விரதம் இருக்கும் பக்தர்கள் காலையிலே எழுந்து குளித்து தங்களது வீட்டின் அருகில் உள்ள முருகன் கோயில்களில் சாமி தரிசனத்திற்காக குவிந்து வருகிறார்கள். இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களுக்கும் பக்தர்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். காலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. இதுதவிர பிற இடங்களில் உள்ள பிரசித்திப்பெற்ற முருகன் கோவில்களில் இன்று வழிபாடு நடந்து வருகிறது. பக்தர்கள் அதிகளவில் இன்று குவிவார்கள் என்பதால் அந்தந்த கோயில் நிர்வாகத்தின் சார்பிலும், காவல்துறை சார்பிலும் பக்தர்கள் வசதிக்காகவும், வழிபாட்டிற்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல கோவில்களில் அன்னதானங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் ஆடி மாதத்தில் 2 முறை கார்த்திகை நட்சத்திரம் வருகிறது. இதனால் 2 முறை ஆடி கிருத்திகை கொண்டாடப்பட உள்ளது. இன்று ஆடிக்கிருத்திகை தினம் முடிவவடைந்த பிறகு மீண்டும் ஆகஸ்ட் 16ம் தேதி ஆடிக்கிருத்திகை வருகிறது. அன்றைய தினமும் பக்தர்கள் முருகன் கோவிலில் சென்று வழிபடலாம்.












Click it and Unblock the Notifications