டெல்லி தேர்தலில் இந்தியா கூட்டணியாக போட்டியிடாமல் போனதே ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம்- CPI(M) சண்முகம்
சென்னை: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு காரணமே, தமிழ்நாட்டைப் போல 'இந்தியா' கூட்டணியாக ஒருங்கிணைந்து போட்டியிடாமல் போனதுதான்; தமிழ்நாடு போல நாடு முழுவதும் இந்தியா கூட்டணி உருக்குப்போல வலுப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது:
டெல்லி சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணி இணைந்து போட்டியிடாததே பாஜகவின் வெற்றிக்கு காரணமாக அமைந்துவிட்டது. தமிழ்நாடு போல நாடு முழுவதும் இந்தியா கூட்டணி உருக்குப்போல வலுப்பட வேண்டும்.
மதவெறி அபாயத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அதுதான் வழி. அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி மேலும் வலுப்பெற மார்க்சிஸ்ட் கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளதை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன். திமுகவின் வாக்குகளை குறைத்துக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக, பாஜக கட்சிகளின் வாக்குகள் கணிசமாக நாம் தமிழர் கட்சிக்கு சென்றுள்ளது. பேச்சு, உடல் மொழி போன்ற சீமானின் நடவடிக்கைகளால் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு பெரிய அளவில் சரிந்துள்ளது.
2021-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளது பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக ஓய்வூதியம் குறித்து குழு அமைத்து 9 மாதம் அவகாசம் அளித்திருப்பதை ஏற்க முடியாது. குழு போட வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தலாம்.
வேங்கை வயலைப் பொறுத்தவரை சிபிசிஐடி போலீசாரின் குற்றப் பத்திரிகையை நாங்கள் ஏற்கவில்லை. பிரச்சனையை முடிக்க வேண்டும் என்பதற்காக யூகத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கும் புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆகவே, அதை மற்றொரு விசாரணை அமைப்புக்கு விடுவதில் என்ன தவறு இருக்கிறது?
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், கீழே சுப்பிரமணியர் கோவில் இருக்கிறது, மேலே சிக்கந்தர் தர்கா இருக்கிறது. பல ஆண்டுகளாக இந்துக்களும் தர்காவுக்குச் சென்று பலி கொடுத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள். மத நல்லிணக்கத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் மூலம் கலவரத்தைத் தூண்டிவிட இந்து அமைப்பினர் மேற்கொண்ட முயற்சி 144 தடை உத்தரவின் மூலம் தடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications