முக தசை சிதைவு நோய்..சிறுமி தான்யாவிற்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை..பழைய முகம்..அம்மா ஆனந்த கண்ணீர்
சென்னை: ஆவடி அருகே அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை தொடங்கியுள்ளது. மகளுக்கு முன்பிருந்தது போல அழகான முகம் கிடைக்கப் போவதை நினைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் தான்யாவின் அம்மா சௌபாக்கியம்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சௌபாக்கியம். இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் தான்யா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அரியவகை முக சிதைவு நோயில் பாதிக்கப்பட்டுள்ளார். பிறகும் போது வழக்கம் போல அனைத்து குழந்தைகளையும் போலத்தான் இருந்துள்ளார் தான்யா.
தான்யாவின் முகத்தில் கரும்புள்ளி போன்று தோலில் தோன்றியுள்ளது. இதனை முதலில் சாதாரண ரத்தக்கட்டு என நினைத்த பெற்றோர்கள் கடந்த 2017ம் ஆண்டுமுதல் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை உட்பட 6க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை நாடி தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் அந்த பாதிப்பானது குறைந்த பாடில்லை.

கடன் வாங்கி செலவு
தான்யாவின் பெற்றோரான ஸ்டீபன் ராஜ் சௌபாக்யா தம்பதியினர் தங்களது சக்திகளுக்கு மேலாக கடன் பெற்று செலவு செய்தும் மருத்துவம் பார்த்து வந்து நிலையில் எந்த பயனும் இல்லை. நாட்கள் போக போக தான்யாவின் முகம் வலது கன்னம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதைவு ஏற்பட தொடங்கியுள்ளது. இதனால் குழந்தையின் அழகிய முகம் மிகவும் பாதிப்படைந்தது. உடன் பயிலும் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கி அன்பை புகட்ட வேண்டிய ஆசிரியர்களும் தான்யாவை அவருக்குள்ள குறைபாடுகளை காரணம் காட்டி வெறுத்து ஒதுக்கி தனிமைப்படுத்தி உள்ளனர்.

முதல்வருக்கு கோரிக்கை
இது தொடர்பாக சிறுமிக்கு சிகிச்சை அளித்தும் பாதிப்பானது சரியாகவில்லை. இந்த நிலையில் முகம் அறுவை சிகிச்சை செய்ய முதல்வர் ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். முகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தின் காரணமாக அவர் பள்ளி படிப்பை முழுவதுமாக பாதித்துள்ளது.

அறுவை சிகிச்சை
இந்த விவகாரம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில், குழந்தை தன்யாவுக்கு உரிய அறுவை சிகிச்சையை சவிதா மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று குழந்தையின் நிலையை அறிந்து மற்ற உதவிகளையும் அரசின் சார்பில் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது

அம்மா ஆனந்த கண்ணீர்
இந்த நோய்க்கான முழு சிகிச்சையையும் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டணமின்றி செய்வதற்கும் உத்தரவாதம் அளித்து இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது தானியாவிற்கு அறுவை சிகிச்சை தொடங்கியுள்ளது. இந்த அறுவை சிகிச்சை தொடர்ந்து 8 மணி நேரம் நடக்கும் என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளனர். தனது மகளின் முன்பு இருந்தது போல் அழகாக மாறப்போவதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது என ஆனந்த கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் சௌபாக்கியம்.












Click it and Unblock the Notifications