தமிழகத்தில் ஆவின் நெய், வெண்ணைக்கு கடும் தட்டுப்பாடு.. எப்போது சரியாகும்.. அதிகாரி தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் தலைநகரம் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆவின் பாலகங்களில் ஆவின் நெய், வெண்ணை போன்ற பொருட்கள் கிடைக்காததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய் , பால்கோவா உள்ளிட்ட பல்வேறு பால் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் ஆவின் நிர்வாகம் நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. ஆவின் பாலகங்களில் இனிப்புகள், பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சில நாட்களாக ஆவின் நெய் வெண்ணெய் போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.அதாவது 200 மற்றும் 500 கிராம் நெய் பாட்டில்கள் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய ஆவின் பாலக உரிமையாளர்கள் ஆவின் நிர்வாகத்தின் பால் கொள்முதல் தற்போது குறைந்துள்ளது. அதனால் பாலில் இருந்து செய்யப்படும் வெண்ணெய், நெய் போன்ற பொருட்கள் வருவதில்லை என்று கூறுகின்றனர். ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் கடுமையாக குறைந்து போனதன் காரணமாக வெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதனால் நெய் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
வெண்ணெய், நெய் தட்டுப்பாடு குறித்து ஆவின் நிர்வாக அதிகாரியிடம் கேட்ட போது, தற்போது பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது இன்னும் ஓரிரு நாட்களில் மக்களுக்கு வழக்கம் போல ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என கூறினார்.












Click it and Unblock the Notifications