இது நல்ல ஐடியாவாக இருக்கே! கூட்டுறவுத்துறை வட்டியில்லா வாரக்கடன் தரணும்! சட்டசபையில் புதிய கோரிக்கை!
சென்னை: கூட்டுறவுத்துறை சார்பில் வட்டியில்லா வாரக்கடன் வழங்க வேண்டும் என சட்டசபையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கேள்வி நேரத்தின் போது பேசிய மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி கடை நடத்துபவர்களின் நிலை குறித்து சில விவரங்களை எடுத்துரைத்தார்.

கந்துவட்டிக்காரர்களிடம் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கடனாக பெற்று வியாபாரம் செய்யும் இந்த சிறு வியாபாரிகள், தங்களுக்கு கிடைக்கும் லாபம் முழுவதையும் கந்துவட்டிகாரர்களுக்கு கொடுத்து விடுவதாக பரிதாபம் தெரிவித்தார்.
தமிழக அரசை பொறுத்தவரை பல விவகாரங்களில் நாட்டிற்கே முன்னுதாரணமாக செயல்பட்டு வரும் நிலையில், வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் கடனுதவி அளிப்பதிலும் மற்ற மாநிலங்களுக்கு ரோல் மாடலாக திகழ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதன் அடிப்படையில் சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி கடை நடத்துபவர்கள், என சிறிய அளவில் பிழைப்பு நடத்துபவர்களுக்கு கூட்டுறவ்வுத்துறை சார்பில் வட்டியில்லா வாரக்கடன் வழங்க வேண்டும் என்ற யோசனையை முன் வைத்தார்.
வட்டியில்லா வாரக்கடன் திட்டத்தின் மூலம் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கடன் வழங்கினால் சிறு வியாபாரிகளும் முன்னேற்றம் அடைய வழிவகை செய்யலாம் என எடுத்துக் கூறினார்.

அப்துக் சமது எம்.எல்.ஏ.வின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், வட்டியில்லா வாரக்கடன் தருவது பற்றி கூட்டுறவுத்துறை சுயமாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் ஏனெனில் பொதுமக்களின், விவசாயிகளின் வைப்புத் தொகையை வைத்தும் அதற்கு வட்டி கொடுக்க வேண்டிய நிலையிலும் தான் கூட்டுறவுத்துறை வங்கிகள் இயங்கி வருவதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினிடத்தில் இந்தக் கோரிக்கையை வைத்து அவர் உத்தரவிட்டார் என்றால், அதற்கேற்ப அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications