பெண் வீட்டு முன்பு சிறுநீர் கழித்த சுப்பையா, அரசு மருத்துவர் பணியிலிருந்து சஸ்பெண்ட்! ஏன் தெரியுமா?
சென்னை: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் முன்னாள் தேசியத் தலைவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவருமான டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் சுப்பையா குடியிருக்கும் குடியிருப்பில் 62 வயது பெண்மணியுடன் தகராறு செய்தார் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புகார். இந்த பெண்ணுக்கு சொந்தமான இடத்தில் சுப்பையா வண்டியை நிறுத்த அனுமதி கேட்டுள்ளார். ஆனால் பெண், வாடகையை தர வேண்டும் என்று கூறினார். இதில்தான் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

சிறுநீர் கழிக்கும் காட்சிகள்
இந்த மோதலின் உச்சமாகத்தான் அனைவரையும் அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. பெண்மணியின் வீட்டின் முன்பாக சுப்பையா குப்பைகளைக் கொட்டுவதுடன் அவரது வீட்டு கதவு முன்பாக நின்று சிறுநீர் கழிக்கும் சிசிவிடி காட்சிகள் வெளியாகின. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மருத்துவர் சுப்பையாவின் இந்த செயலுக்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

புகார் வாபஸ்
ஆனால் இந்த காட்சிகளை சுப்பையா நிராகரித்திருந்தர். இது தொடர்பாக சென்னை ஆதம்பாக்கத்தில் சுப்பையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் டாக்டர் சுப்பையா தரப்பில் அழுத்தம் தரப்பட்டதால் இப்புகார் வாபஸ் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எய்ம்ஸ் உறுப்பினர்
மேலும் சுப்பையா மீது அரசு துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனிடயே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக மருத்துவர் சுப்பையா நியமிக்கப்பட்டார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நபரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமிப்பதா? எனவும் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

பணியிடை நீக்கம்
இந்நிலையில் மருத்துவர் சுப்பையா, அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறியதாகவும் துறை ரீதியான விசாரணை நடைபெறுவதாலும் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மருத்துவ கல்லூரி இயக்குநரகம் அறிவித்துள்ளது. துறை ரீதியான விசாரணை தொடரும் வரை சுப்பையாவின் பணிநீக்கம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வீட்டை ஏபிவிபி அமைப்பினர் முற்றுகையிட்டு தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அதில் கைது செய்யப்பட்டவர்களை சிறைக்கு சென்று சுப்பையா சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அரசு ஊழியருக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறையை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications