ஸ்டாலின் வீட்டு முன்பு ஒரே பரபரப்பு.. கைதான பாஜக மாணவர் அமைப்பு.. ஆவேசத்தில் வானதி சீனிவாசன்
ஸ்டாலின் வீட்டு முன்பு ஒரே பரபரப்பு.. கைதான பாஜக மாணவர் அமைப்பு.. ஆவேசத்தில் வானதி சீனிவாசன்
சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி வேண்டும் என்று கோஷம் எழுப்பியபடி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் வீட்டை பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர் முற்றுகையிட முயன்றதால் மாணவர்கள் - போலீஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்த மாணவி, தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளியை அடுத்த மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2படித்து வந்தார்....
ஹாஸ்டலில் தங்கி படித்த அவர் கடந்தமாதம் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதால்தான், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது...

பரபரப்பு
இதுகுறித்து மாணவியின் வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான கேஸ் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது.. மற்றொரு பக்கம் இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.. மாணவி மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கேட்டு கடந்த சில தினங்களாகவே போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறது.

கண்டனம்
நேற்றுகூட பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர், முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்றனர்... இதற்காக, நேற்று பகல் 2 மணியளவில், சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலின் வீட்டை நோக்கி மாணவ, மாணவிகள் சாலைக்கு திரண்டு வந்தனர்.. ஆனால், அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், அவர்களை சாலைக்குள் செல்ல விடாமல் தடுத்தனர்.

மதமாற்ற தடை சட்டம்
ஆனால் மாணவர்களோ, போலீஸாரின் தடுப்புகளை மீறி முதல்வர் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தனர்.. அவர்களை போலீசார் பின்னாடியே ஓடிச்சென்று விரட்டி பிடித்தனர்.. பிறகு வலுக்கட்டாயமாக அவர்களை ஜீப்களில் ஏற்ற முயன்றனர்.. இதை பார்த்ததும் மாணவர்கள் போலீஸாரை கண்டிக்க தொடங்கினர்.. அங்கேயே ரோட்டிலேயே உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள்.. மாணவி மரணத்துக்கு நீதி வேண்டும், தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கோஷம் போட்டனர்.. பின்னர் போலீஸாரை கண்டித்தும் முழக்கமிட்டனர்.

தள்ளுமுள்ளு
இதனால் மாணவர்களை போலீசாரால் சமாளிக்க முடியாமல் போனது... அதனால் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு, அதன்பிறகு மாணவ, மாணவிகளை குண்டுக்கட்டாக தூக்கி சென்று வாகனங்களில் ஏற்றினர்... அப்போதும் போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது... பிறகு 17 பெண்கள் உட்பட 35 பேரை போலீஸார் கைது செய்யப்பட்டனர்.. ஆனால், வானதி சீனிவாசன், மாணவர்கள் அமைதியான முறையில்தான் போராட்டம் நடத்தினார்கள் என்று சொல்லி, அதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன்
இது தொடர்பாக பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், "தஞ்சை மாவட்டம், மைக்கேல்பட்டி, தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பினர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லம் முன்பு நேற்று (பிப்.14) அறப்போராட்டம் நடத்தினர்.

கண்டனம்
இந்திய அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமையின்படி ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து நள்ளிரவு வரை அலைக்கழித்துள்ளனர். ஏபிவிபி மாணவர் அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்ட 33 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது. அமைதியான வழியில் போராடிய மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications