திருவள்ளூர் உதயசூரியனில் இனி “சந்திரன்” - திமுகவில் அதிரடி மாற்றங்கள்.. 7 மாவட்டங்களில் டுவிஸ்ட்?
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மற்றும் வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்திருக்கும் நிலையில் 7 மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திமுகவில் உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது திமுகவின் 15 வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
கிளைக் கழகம், பேரூர், நகரம், ஒன்றியம், மாநகரம், வட்டம், பகுதி போன்ற பல்வேறு பகுதிகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.
திமுக தலைமைக்கு தலைவலி.. டென்ஷனாக பறந்த போன்.. 'உயிரே அத்துப்போச்சு.. தீக்குளிப்பேன்’ - பதறிய மா.செ!
மாவட்டச் செயலாளர் தேர்தல்
இந்த நிலையில் உட்கட்சித் தேர்தலில் முக்கிய நிகழ்வான மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. அத்துடன் மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட துணை செயலாளர்கள், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
வேட்புமனுத் தாக்கல்
இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடத்தப்படும் முதல் மாவட்ட செயலாளர் தேர்தல் என்பதால் இதில் கடும் போட்டி நிலவி வருகிறது. மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் அண்ணா அறிவாலயத்தில் நேரில் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
கடும் போட்டி
முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய மாவட்ட செயலாளர் என பலரும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் வேட்புமனுக்களை பெற்றனர்
முடிவு எப்போது
வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்ததை தொடர்ந்து செப்டம்பர் 26 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 27 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது உள்ளது. இந்த நிலையில் 7 மாவட்டங்களில் திமுக செயலாளர்கள் மாற்றப்பட்டு உள்ளதாக பட்டியலுடன் தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னாள் அமைச்சர் பழனியப்பன்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த செங்குட்டுவனுக்கு பதிலாக மதியழகனும், தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த இன்பசேகரனுக்கு மாற்றாக முன்னாள் அமைச்சர் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பனும், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த மூர்த்திக்கு பதிலாக மதுரா செந்திலும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
திருவள்ளூர் சூரியனில் சந்திரன்
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஏனாதி பாலசுப்ரமணியனுக்கு மாற்றாக பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரையும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த பூபதிக்கு பதிலாக சந்திரனும் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. கோவை தெற்கு மாவட்ட செயலாளராக தளபதி முருகேசனும், கோவை வடக்கு மாவட்ட செயலாளராக தொண்டாமுத்தூர் ரவியும் தேர்வாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.