வச்சான் பாரு ஆப்பு எனக்கு! எரிகிற தீயில் டீசல் ஊற்றும் எண்ணெய் நிறுவனங்கள்! இனி தினமும் மாறும் விலை?
டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை தினசரி அடிப்படையில் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது. மேலும், தினசரி மாற்றம் முறை அமலுக்கு வந்தால், விலைவாசியிலும் ஏற்ற இறக்கம் என்பதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 82 காசும், டீசல் லிட்டருக்கு 86 காசும் உயர்த்தப்பட்டன. இதற்கு முன் நான்கு நாட்களுக்கு முன்னரே தலா 3 ரூபாய்க்கும் அதிகமாக விலை உயர்த்தப்பட்டிருந்தது. தொடர்ந்து குறுகிய இடைவெளியில் விலை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் டீலர்கள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்து வருகின்றன.
கச்சா எண்ணெய்
இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களை அடிப்படையாக கொண்டு உள்நாட்டில் எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படும் நடைமுறை ஏற்கனவே இருந்தது. 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து தினசரி விலை நிர்ணய முறை அமலுக்கு வந்தது. அதன்படி ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணிக்கு அடுத்த நாளுக்கான புதிய விலைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த நடைமுறை முழுமையாக செயல்படாமல் இருந்தது.
எரிபொருள் விலை உயர்வு
2021 ஆம் ஆண்டு உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தபோது, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. தமிழகத்தில் சில இடங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது. அதே சமயம் மக்கள் எதிர்ப்பை சமாளிக்க தீபாவளி நேரத்தில் மத்திய அரசு பெட்ரோல் மீது 5 ரூபாய், டீசல் மீது 10 ரூபாய் வரி குறைப்பு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு மீண்டும் கலால் வரி குறைக்கப்பட்டதால் பெட்ரோல் லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாயும் குறைந்தன. பின்னர் 2024 மார்ச் மாதத்திலும் தலா 2 ரூபாய் குறைக்கப்பட்டது.
எரிபொருள் தட்டுப்பாடு
அதற்குப் பிறகு நீண்ட காலமாக விலைகளில் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடும் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் தெரிகிறது. இதன் காரணமாக கடந்த வாரம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய்க்கும் அதிகமாகவும், டீசல் விலை அதே அளவிலும் உயர்த்தப்பட்டது.
பெட்ரோல் விலை
தமிழகத்தில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 103 ரூபாயை தாண்டியுள்ளது. டீசல் விலையும் 95 ரூபாயை கடந்துள்ளது. இந்த சூழலில் மீண்டும் தினசரி விலை நிர்ணய முறையை அமல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எப்படி மாறுகிறதோ, அதற்கேற்ப இந்தியாவிலும் தினந்தோறும் விலை மாற்றம் செய்யப்படலாம்.
டீசல் விலை
உலகளவில் கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. பல நாடுகளில் விலை மேலும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் இன்னும் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. அதனால் சந்தை நிலவரத்தை பார்த்து தினசரி விலை மாற்றம் செய்யும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்கின்றனர் மத்திய அரசு அதிகாரிகள்.
இந்நிலையில் தினசரி விலை மாற்ற முறை மீண்டும் வந்தால், பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புதிய விலையை கவனிக்க வேண்டிய சூழல் உருவாகும்.
கூடுதல் செலவு
குறிப்பாக சரக்கு வாகனங்கள், பேருந்துகள், டாக்ஸிகள், இருசக்கர வாகன பயனாளிகள் என அனைவருக்கும் கூடுதல் செலவு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், பொதுமக்களின் குடும்பச் செலவில் மீண்டும் அழுத்தம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications