சென்னையில் அதிரடி காட்டிய போலீஸ்! கடந்த ஓராண்டில் மட்டும் 1,192 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
சென்னை: தமிழ்நாட்டிலும், சென்னையிலும் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், கடந்த ஓராண்டில் சென்னையில் மட்டும் சுமார் 1,192 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என காவல் ஆணையர் சந்தீப் தெரிவித்திருக்கிறார்.
சமீப நாட்களாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக கள்ளச்சாராயம் விவகாரத்தில் காவல்துறை மீது அதிமுக, பாஜக மட்டுமல்லாது திமுகவின் தோழமை கட்சிகளும் விமர்சனங்களை அடுக்கியிருந்தன. இப்படி இருக்கையில் நேற்று சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது இந்த விமர்சனங்களை மேலும் தீவிரமடைய செய்திருக்கிறது.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன், "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சட்டம் ஒழுங்கை பேணுவதில் திமுக அரசு அக்கறை காட்டவில்லை. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கொலையை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். அதேபோல,
"சட்டம், ஒழுங்கை என்ன செய்வது? ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்" என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை சமூகவிரோத கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டுமென அரசை வலியுறுத்துகிறேன்" என வலியுறுத்தியிருந்தார்.
இப்படியாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் சென்னையில் குண்டர் சட்டத்தில் 1,192 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்,
"கடந்த ஓராண்டில் சென்னையில் குண்டர் சட்டத்தில் 666 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை சென்னையில் மட்டும் 1,192 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த 6 மாதங்களில் மட்டும் 769 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications