சமூக வலைதளங்களில் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தினால்... நடவடிக்கை பாயும்... காங்கிரஸ் எச்சரிக்கை..!
சென்னை: சமூக வலைதளங்களில் கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் அவதூறு பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காங்கிரசுக்கு எதிராக பாஜக அவதூறு செய்திகளை பரப்பி வருவதாக கூட்டத்தில் பேசப்பட்டது.
தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
அதில் காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கின்ற வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோருதல் தொடர்பாக இயற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம் பின்வருமாறு;
தியேட்டர்களில் 100% சீட் அனுமதியை ரத்து செய்க.. இளைஞர்களின் உயிரோடு விளையாடுவதை நிறுத்துக- காங்கிரஸ்
ஊடகத்துறை
''நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இன்றைய அரசியல் செயல்பாடுகளில் ஊடகத்துறையின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சமூக ஊடகங்களின் பங்கு மிக வேகமாக வளர்ந்து வருகிறது.''
பா.ஜ.க. பரப்புகிறது
''இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வகுப்புவாத பா.ஜ.க. அவதூறு செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி வருகிறது. இதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சியினருக்கு இருக்கிறது. இதை நிறைவேற்றுகிற வகையில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும் அச்சு மற்றும் காட்சி ஊடகம், சமூக ஊடகம் ஆகியவற்றின் மூலம் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்வது மிகமிக அவசியமாகும்.''
தடுத்து நிறுத்துக
''ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர் கட்டுப்பாடுகளை மீறுகிற வகையில் ஊடகத்தின் மூலமாக காங்கிரஸின் செயல்பாடுகள் மற்றும் முடிவுகளை பகிரங்கமாக விமர்சனம் செய்கிற போக்கு பரவலாக வளர்ந்து வருகிறது. உடனடியாக இத்தகைய ஆரோக்கியமற்ற போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.''
கடும் நடவடிக்கை
''எனவே, காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும், கட்சியின் நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கின்ற வகையில் ஊடகங்களின் மூலமாக கருத்துகளைப் பகிரங்கமாகத் தெரிவிப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.''