"நான் கோபமா கத்தினேன்.. ஆனா விஜயகாந்த் அன்பா பேசினார்.. இனிமே பாக்க முடியாது” கதறிய அருண்பாண்டியன்!
சென்னை: விஜயகாந்த் மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், அவரது நெருங்கிய நண்பராகவும், அவரது கட்சியில் எம்.எல்.ஏவாகவும் இருந்த அருண் பாண்டியன், கலங்கிப்போய் பேசியுள்ளார்.
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரின் மறைவு தமிழ் திரையுலகில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று திரையுலகினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்த்தின் மறைவுக்கு நடிகர் அருண் பாண்டியன் தனது துயரை பதிவு செய்துள்ளார். அருண் பாண்டியனுக்கு ஊமை விழிகள் படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றுக் கொடுத்தவர் விஜயகாந்த். அதன் பிறகு பல ஆண்டுகாலம் இருவரும் நெருக்கமாக பழகினர். கட்சி தொடங்கியபிறகு, 2011ல் பேராவூரணி தொகுதியில் அருண் பாண்டியனுக்கு சீட் கொடுத்து எம்.எல்.ஏ ஆக்கினார் விஜயகாந்த். சிறிது காலத்தில் இருவருக்கு இடையேயும் மனக்கசப்பு ஏற்பட்டு, அருண் பாண்டியன் அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், விஜயகாந்த் மறைவு பற்றி அருண்பாண்டியன் பேசுகையில், "1984ல் முதன் முதலில் சந்தித்தோம். அப்போது முதல் நல்ல நண்பர்களாக இருந்தோம். அன்றில் இருந்து இன்று வரை எனக்கு அண்ணனாகவும், நண்பராகவும் இருக்கிறார். அவரது இழப்பு எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே இழப்பு. அவரை மாதிரி ஒரு மனுஷனை இந்த ஜென்மத்தில் பார்க்க முடியாது. அதை அழுத்தம் திருத்தமாகச் சொல்வேன்.
ஒரு பிரச்சனைக்காக நடிகர் சங்கத்திற்கு சென்று கோபமாக பேசினேன். நீங்கள் செய்தது ரொம்ப தவறு, காதும் கண்ணும் அதனதன் வேலையைச் செய்ய வேண்டும், உங்கள் காது கண்ணின் வேலையைச் செய்கிறது என்று கோபமாக கூறினேன். அப்படி சொன்னதற்கு இயல்பாக அவர் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர், முதலில் உட்காரு பாண்டி, உட்கார்ந்து சொல்லு என்று கூறினார்.
இப்படிப்பட்ட பக்குவம் எந்த தலைவருக்கும் இருக்காது. ஒரு தலைவர் மேல் நாம் கோபப்பட்டால், அதற்கு எதிர்ப்பை தான் காட்டுவார்கள். ஆனால், இவர் பாசத்தைக் காட்டினார். சின்ன சின்ன விஷயத்திற்கும் அவர் பாசத்தைக் காட்டுவார். இப்படிப்பட்ட வேறு ஒருவரை யோசிக்கக் கூட முடியாது. என்றென்றைக்கும் அவர் எங்கள் மனதில் இருக்கிறார்" என கலங்கியபடி பேசியுள்ளார்.
விஜயகாந்த், 1999ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரிய தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார். இதுபோன்ற பணிகளால் திரைக் கலைஞர்களால் கொண்டாடப்படுகிறார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications