நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து.. தீர்ப்பு வழங்கி உறுதி செய்த சென்னை குடும்ப நல நீதிமன்றம்
சென்னை: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இரு தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் நவம்பர் 27ஆம் தேதியான இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது. அதில் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம் அவர்களின் 18 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரிராஜா இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் ட்விட்டரில் தாங்கள் பிரிந்து விட்டதாக பதிவிட்டனர்.
தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.
இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை. விவாகரத்து கோரிய வழக்கில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் மூன்றாவது முறையாக ஆஜராகவில்லை என்பதால் விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த விசாரணைக்கு இருவரும் நவ.21 ஆம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது ஐஸ்வர்யாவும் தனுஷும் ஆஜரானார்கள். கோர்ட் அறையின் கதவுகள், ஜன்னல்கள் மூடப்பட்டன. இருவரிடமும் நீதிபதி சுபா தேவி பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு நவ.27 ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இன்று நீதிமன்ற நீதிபதி சுபாதேவி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டார். அதோடு 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி நடைபெற்ற திருமண பதிவை ரத்து செய்தும் நீதிபதி சுபாதேவி உத்தரவு பிறப்பித்தார். இதன்மூலம் தனுஷ் - ஐஸ்வர்யாவின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications