கூலி படத்தை விடுங்க.. தூய்மை பணியாளர்களுக்காக நடிகர் தீனா செய்த காரியம் தெரியுமா?
சென்னை: தூய்மை பணியாளர்கள் போராட்டம், காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு மத்தியில் முதலமைச்சர் கூலி படம் பார்த்தது சர்ச்சையாகியுள்ளது. திரையுலகம் முழுவதும் கூலி படம் பேசு பொருளாகியுள்ளது. ஆனால் நடிகர் தீனா தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளார். முதல்வர், காவல்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மாநகராட்சி சுகாதாரப் பணியை தனியார் நிறுவனத்திற்கு விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள், கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அப்போது தூய்மைப் பணியாளர்கள், சமூக செயற்பட்டாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

களமிறங்கிய தீனா
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மொத்த திரையுலகமும், அரசியல் புள்ளிகளும் கூலி படத்திற்கும், ரஜினிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகரும், சண்டை பயிற்சியாளருமான தீனா, கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தீனா, "போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். உங்கள் கைதுக்கு மிக்க நன்றி. நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களின் கோரிக்கையை பரிந்துரை செய்வீர்கள். போராட்டம் நடத்துவீர்கள் எல்லாம் செய்வீர்கள். ஆட்சிக்கு வந்த பிறகு எங்களை தூக்கி மிதிப்பீர்கள். ஓட்டு போட்டு உங்களை ஆட்சியில் அமர வைத்ததற்கு எங்களை கைது செய்வீர்கள், இன்னும் கொஞ்ச நாளில் சாவடிப்பீர்கள். முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் ரொம்ப நன்றி.
முதல்வர் என்ன செய்தார்
எங்களால் வேறு என்ன சொல்ல முடியும். நாங்கள் சாவதற்காகவே பிறந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். அதனால் தான் இப்போதும் எங்களை அடக்கி, ஒடுக்கி கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கான வேலை வாய்ப்பை, வாழ்வுரிமையை தொடர்ந்து பறித்துக் கொண்டே இருக்கின்றார்கள். உங்கள் ஏவல் ஆட்களை வைத்து அடித்து, மிதித்து குண்டுக்கட்டாக தூக்கி சிறையில் அடைப்பீர்கள். முடிந்தால் ஆணவ கொலையும் செய்வீர்கள். எல்லாவற்றுக்கும் நன்றி.
எங்கள் மக்கள் 13 நாட்கள் அறவழியில் போராடிக் கொண்டிருந்தனர். யாரோ ஒருவர் நடைபாதையில் பிரச்சனை என தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இப்படி தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றம் வெளியே வந்து பொது மக்களின் பிரச்சனையை பாருங்கள். யாரோ ஒருவர் கொடுத்த புகாரில் இந்த மக்களை கைது செய்வது எந்த வகையில் நியாயம். எங்கள் மக்களுக்காக முதல்வர் என்ன குரல் கொடுத்தார். என்ன நடவடிக்கை எடுத்தார். இந்தப் பிரச்சனைக்கு எப்படி தீர்வு கொடுப்பீர்கள்.
விளைவுகள் கடுமையாகும்
எங்கள் சகோதரி வளர்மதி எங்கே என்று தெரியவில்லை. கொலை குற்றவாளியை போல, போராடியவர்களை ஜீப்பில் வைத்து ஸ்டேசன், ஸ்டேசனாக அலைக்கழித்து கொண்டிருக்கிறீர்கள். எங்கள் மக்கள் அடிபட்டுள்ளனர். சகோதரி வளர்மதி பாதுகாப்பாக வர வேண்டும். அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் விளைவு கடுமையாக இருக்கும். காவல்துறை, நீதிமன்றம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசும் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். இல்லையென்றால் குடிசை பகுதி மக்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்." என்றார்.












Click it and Unblock the Notifications