பையன் கதவ ரொம்ப நேரம் திறக்காம மூடியிருந்தா.. போய் என்னன்னு பாருங்கள்.. நடிகர் கார்த்தி அட்வைஸ்
சென்னை: உங்கள் பையன் கதவ ரொம்ப நேரமா மூடியிருந்தா என்னனு போய் பாருங்கள் என பெற்றோர்களுக்கு நடிகர் கார்த்தி அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழக காவல் துறை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் நான் எப்போதும் காவல் துறையை ஹீரோவாக பார்க்கிறேன். நான் சில மாதங்களுக்கு முன்னர் போதைப் பொருள் ஒன்றை பற்றி பேசியிருந்தேன். அதை பற்றி பெற்றோர் பலர் கேட்கிறார்கள்.
மாணவர்களை கேட்டால் என்னுடைய நண்பர்கள் பயன்படுத்துவார்கள் என்கிறார்கள். அந்த போதை பொருள் ஜில்லென இருக்கும் என்கிறார்கள். பெற்றோருக்கு அதை பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஆனால் இளைய தலைமுறையினருக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது.

மொபைலில் கேம் விளையாடி விளையாடி வெளியே சென்றால் அவர்களுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. அந்த வயதில் எல்லாம் டிரை செய்யணும் என தோன்றும். இப்போது பள்ளி மாணவர்களும் போதை பொருள் விவகாரத்தில் சிக்கிவிட்டார்கள். இது மிகவும் பயத்தை உண்டாக்கி வருகிறது.
போதை பொருட்கள் நமது மூளையை பேதளிக்க வைக்கிறது. இப்போது எல்லா கடைகளிலும் இது மறைமுகமாக விற்கப்படுகிறது. பள்ளிகளுக்கு அருகே கூட கிடைக்கிறது. போதை பொருள்கள் பயன்படுத்துவது வீரம் என கருதுகிறார்கள். விளையாட்டு மிக மிக முக்கியம் என நான் கருதுகிறேன். அதை இந்த அரசு அதிகமாக ஊக்கப்படுத்த வேண்டும்.
பெற்றோர் முதலில் பிள்ளைகளிடம் நண்பர்களாக பழகுங்கள். கதவை நீண்ட நேரம் மூடியிருந்தால் என்ன செய்கிறார்கள் என பாருங்கள். போதை பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என அனைத்து சமயங்களிலும் இது போன்ற போதை பொருளை பயன்படுத்துவதாக கூறுகிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழிநடத்த வேண்டும். போதைப்போருள் இல்லாத ஒரு சமுதாயத்தை நாம் அனைவரும் சேர்ந்து தான் உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications