நடிகர் கிருஷ்ணா விவகாரம்.. சப்ளையர் கெவின் கையில் இருந்த போதைப்பொருட்கள்.. அதிர்ந்துபோன போலீஸ்!
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் போதைப்பொருள் சப்ளை செய்த கெவின் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கெவின் என்பவரை கைது செய்த போது, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் காவல் துறையினரையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே ஸ்ரீகாந்த் சிக்கினார். பிரசாத்திற்கு பெங்களூரில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி கொண்டு வந்து விற்பனை செய்தவர் பிரதீப் குமார்.

நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன்
பிரதீப் குமார் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கழுகு படத்தின் மூலமாக பிரபலமானவர் கிருஷ்ணா. இதன்பின் போலீசார் கிருஷ்ணாவுக்கு சம்மன் அளித்து விசாரணைக்கு ஆஜராக அழைத்தனர்.
வாக்குமூலம்
தொடர்ந்து மதியம் 2 மணியளவில் கிருஷ்ணா தனது வழக்கறிஞருடன் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகினார். அதில் பிரசாத் என்பவருடன் ஒரு வெப் சீரிஸ் தயாரிப்புக்காக பேசி வந்ததாகவும், போதைப்பொருள் பழக்கம் தனக்கு இல்லை என்றும் கூறினார். மருத்துவப் பரிசோதனையிலும் கிருஷ்ணாவுக்கு சாதகமாகவே முடிவுகள் வந்ததாக கூறப்பட்டது.
கைப்பற்றப்பட்ட ஆதாரம்
அவரது செல்போனிலும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டிருக்கிறார். 2020ஆம் ஆண்டு முதல் வாட்ஸ் அப் மூலமாக கிருஷ்ணா நடத்திய உரையாடல்கள் கைப்பற்றப்பட்டு போலீசார் ஆதாரங்களை திரட்டி இருக்கின்றனர்.
சப்ளையர் கெவின்
அதேபோல் கிருஷ்ணாவுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த கெவின் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பிரதீப் குமாரின் கூட்டாளி என்று சொல்லப்படுகிறது. பெங்களூரில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்து கெவின் விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கெவினை போலீசார் கைது செய்யும் போதும் கூட அவரிடம் இருந்து ஏராளமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கையில் இருந்த போதைப்பொருள்
அதாவது, கொக்கைன் அரை கிராம், மெத்தபட்டமைன் 10.30 கிராம், எம்டிஎம்ஏ 2.75 கிராம், ஓஜி கஞ்சா, கஞ்சா 30 கிராம், போதைப்பொருள் உட்கொள்ள பயன்படுத்தப்படும் ஓசி பேப்பர் 40 கிராம், ஜிப் லாக் கவர் 40 கிராம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் சிறிய ரக வெய்ட் மெஷின், ஒரு லேப்டாப் மற்றும் செல்ஃபோன் கைப்பற்றப்பட்டுள்ளது. இது போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
அடுத்தது என்ன?
அதேபோல் நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் எடுத்து கொள்ளும் போது, நண்பர்களுடன் இணைந்து பகிர்ந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர். இதற்காகவே பிரத்யேக வாட்ஸ் அப் குழுவையும் வைத்திருக்கிறார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வாட்ஸ் அப் குழுவில் இருப்பவர்கள், கெவினிடம் போதைப்பொருள் வாங்கிய நபர்களையும் போலீசார் அடுத்தடுத்து கைது செய்வார்கள் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications