உஷாராக இருந்த நடிகர் கிருஷ்ணா.. செல்போனில் கிடைக்காத ஆதாரங்கள்.. விசாரணையில் சிக்கியது எப்படி?
சென்னை: போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக நடிகர் கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனை செய்த நிலையில், தற்போது நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டிருக்கிறார். கிருஷ்ணாவின் செல்போனில் போதைப்பொருள் வாங்கியதற்கு எந்த ஆதாரங்களும் சிக்கவில்லை. இந்த சூழலில், கிருஷ்ணா தனது மேனேஜரின் ஓட்டுநர் செல்போனை பயன்படுத்தி போதைப்பொருள் பெற்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாந்த் மற்றும் அவரின் நண்பரான பிரதீப் குமார் ஆகியோர் மூலமாக ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப் பொருளை பெற்று வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத், பிரதீப் குமார் ஆகியோருக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடர்பு?
இதன்பின் இவர்களை கைது செய்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியது. இந்த விவகாரத்தில் சினிமா துறையைச் சேர்ந்த பலரும் இருப்பதாகவும், முதல் பெயராக நடிகர் கிருஷ்ணா இருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதன்பின் நடிகர் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன் கொடுத்தனர். அவர் அப்போது கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தார்.
போலீசார் முன் ஆஜர்
சம்மன் கொடுத்த சில நிமிடங்களில் கிருஷ்ணாவின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதால், அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை போலீசார் முன்னிலையில் நடிகர் கிருஷ்ணா ஆஜரானார். இதன்பின் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வைத்து நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மருத்துவ பரிசோதனை
அப்போது கிருஷ்ணா, தனக்கு போதைப் பொருள் பழக்கம் கிடையாது. இதய நோய் மற்றும் இரைப்பை பிரச்சனை இருப்பதால், போதைப் பொருள் உட்கொள்ள முடியாது. அதேபோல் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஸ்ரீகாந்த் எனது நண்பர் என்று தெரிவித்திருந்தார். இதன்பின் கிருஷ்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
வீட்டில் சோதனை
அதன் முடிவில் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று முடிவு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முதல் தொடர்ந்து 16 மணி நேரமாக நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை பெசண்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள நடிகர் கிருஷ்ணாவின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிருஷ்ணா கைது
காலை முதலே சோதனை நடந்து வரும் நிலையில், கிருஷ்ணா பயன்படுத்தும் மருத்துகளை போலீசார் கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்து சென்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரின் கார், செல்போன் உரையாடல்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சூழலில், நடிகர் கிருஷ்ணா போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் அம்பலம்
போதைப் பொருளை கெவின் என்பவரிடம் இருந்து தனது மேனேஜரின் கார் ஓட்டுநர் மூலமாக கிருஷ்ணா வாங்கியதாகவும், அதன் மூலமாகவே பணப் பரிவர்த்தனை செய்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கெவின் என்பவர் அதிமுகவின் முன்னாள் நிர்வாகி பிரசாத்துடன் தொடர்பில் இருந்த பிரதீப்பின் கூட்டாளி. தற்போது கெவினின் மொபைலில் இருக்கும் ஆதாரங்களை கைப்பற்ற போலீசார் முயற்சித்து வருகின்றனர். இதன்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications