நடிகர் ஸ்ரீகாந்த் கைது.. அடுத்து சிக்கும் கழுகு பட நடிகர் கிருஷ்ணா.. சம்மன் அளித்த போலீஸ்!
சென்னை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் சம்மன் போலீசார் சம்மன் அளித்துள்ளனர். நடிகர் கிருஷ்ணா படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள நிலையில், விசாரணையை விரைவுபடுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ரோஜா கூட்டம், மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், நண்பன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த். நண்பன் படத்திற்கு பின் ஸ்ரீகாந்த் நடித்த 16 படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதனால் சிறிய பட்ஜெட் படங்களிலும், துணைக் கதாபாத்திரங்களிலும் ஸ்ரீகாந்த் நடித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்கைன் விற்பனை
அதிமுகவைச் சேர்ந்த ஐடி விங் நிர்வாகி பிரசாத் கடந்த 29ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு போதைப் பொருள் பழக்கம் இருப்பது தெரிய வந்தது. அவர் கொக்கைன் போதைப் பொருளை விற்றதும் தெரிய வந்தது. இவர் பிரதீப் குமார் என்ற நபரிடம் இருந்து போதைப் பொருள் பெற்று விற்பனை செய்தது தெரிய வந்தது.
5 ஆண்டுகள்
அதேபோல் இந்த பிரதீப் குமார் பெங்களூரைச் சேர்ந்த கானா நாட்டின் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஜானிடம் இருந்து போதைப் பொருள் பெற்றுள்ளார். இவரையும் போலீசார் சென்னையில் வைத்து கைது செய்து, அவரது செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் ஸ்ரீகாந்தின் நண்பரான பிரசாத்திற்கு 2020ஆம் ஆண்டு முதல் பிரதீப் குமார் கொக்கைன் போதைப் பொருளை விற்றுள்ளது தெரிய வந்தது.
40 முறை வாங்கிய ஸ்ரீகாந்த்
தீங்கிரை என்ற படத்தை தயாரித்ததன் மூலமாக பிரசாந்த் மற்றும் ஸ்ரீகாந்த் இடையில் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின் சில பார்ட்டிகளில் பிரசாந்த், ஸ்ரீகாந்த்-க்கு போதைப் பொருள் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தி கைது செய்யப்பட்ட பின், அவரின் ஜிபே பரிவர்த்தனை ஆராயப்பட்டுள்ளது. அதில் 40 முறை கொக்கைன் போதைப்பொருளை ஸ்ரீகாந்த் வாங்கி இருக்கிறார்.
நடிகர் கிருஷ்ணாவுக்கு சிக்கல்
இதற்காக ரூ.4.72 லட்சம் வரை ஸ்ரீகாந்த் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகளில் யார் யாருக்கு போதைப் பொருள் பழக்கம் இருக்கிறது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில் முதல் பெயராக நடிகர் கிருஷ்ணா இருக்கிறார்.
தயாராகும் போலீஸ்
இதனால் நடிகர் கிருஷ்ணாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் நடிகர் கிருஷ்ணாவுக்கு நுங்கம்பாக்கம் போலீசார் தரப்பில் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கிருஷ்ணா கேரளாவில் படப்பிடிப்புக்காக சென்றுள்ளதால், விரைவில் ஆஜராகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கழுகு, அலி பாபா, பண்டிகை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கிருஷ்ணா. அஜித் குமாரை வைத்து பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தனின் தம்பி இவர். இதனால் கிருஷ்ணாவுக்கு போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் தொடர்பு இருப்பது கூடுதல் விவாதத்தை தொடங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications