Madhavan: ஜம்மு காஷ்மீர் மழை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் மாதவன்! இன்று தமிழகம் திரும்புவாரா?
சென்னை: பிரபல திரைப்பட நடிகர் மாதவன், வட இந்திய மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கித் தவிப்பதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று நிலைமை சரியானால், அவர் தமிழகம் திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லே-வில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த மாதவன், திடீரென ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் தனது பயணத்தை ரத்து செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளானார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, "லே-வில் மீண்டும் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கனமழையில் சிக்கிக் கொண்டேன். விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வெளியேற வழியில்லை. இயற்கையின் முன் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை உணர்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய அனுபவம்:
நடிகர் மாதவன் ஒருமுறை இதுபோன்ற இயற்கைச் சீற்றத்தில் சிக்கியது இது முதல்முறையல்ல. கடந்த 2008-ஆம் ஆண்டு '3 இடியட்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, கடுமையான பனிப்பொழிவில் லடாக்கில் சிக்கித் தவித்தார். தற்போது அதே போன்றதொரு அனுபவம் மீண்டும் ஏற்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்முவின் நிலை:
தொடர் மழை காரணமாக ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாதவன் தற்போது பாதுகாப்பாக உள்ளதாகவும், வானிலை சீரானதும் அவர் அங்கிருந்து புறப்படுவார் என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அவர் இன்று தமிழகம் திரும்புவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த மாதவன்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அலைபாயுதே' படத்தில் மாதவன் அறிமுகமானார். அவருடன் ஷாலினி நடித்திருந்தார். கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான இந்த படம் காதல் காவியமாக கொண்டாடப்படுகிறது.
கங்கனா ரனாவத்துடன் மாதவன் இரு படங்களில் நடித்துள்ளார். அது போல் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்டரி படத்தை மாதவன் இயக்கியிருந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மழை பெய்து வரும் ஜம்முவில், 24 மணி நேரத்தில் உதம்பூரில் 629.4 மி.மீ. மழையும், ஜம்முவில் 380 மி.மீ. மழையும் பெய்துள்ளது. ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் நதி வெள்ள அபாய அளவைத் தாண்டிப் பாய்வதால், பல குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
உயிரிழப்புகள்:
இந்தக் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, வைஷ்ணவிதேவி கோயிலுக்குப் புனித யாத்திரை சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் உட்பட 30 பேர் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
திரையுலகினர் பாதிப்பு:
கடந்த ஆண்டு சென்னையில் பெய்த மழை வெள்ளத்தில் நடிகர் அமீர்கான், காட்டுப்பாக்கத்தில் சிக்கியிருந்தார். அதுபோல, நடிகை நமீதா, நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் ஸ்ரீமன் போன்றோரும் சிக்கித் தவித்தனர். அவர்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். நடிகர் மன்சூர் அலிகான், ராஜ்கிரண் உள்ளிட்டோர் கடந்த வடகிழக்கு பருவமழைக்கு முந்தைய மழையில் சிக்கியிருந்தனர்.












Click it and Unblock the Notifications