ஐசியூவில் நடிகர் மன்சூர் அலிகான்.. சென்னை மருத்துவமனையில் சிகிச்சை.. உடல்நல கோளாறுக்கு என்ன காரணம்?
சென்னை: வேலூர் லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் இன்று திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் இருந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகர் மன்சூர் அலிகான். அதன்பிறகு படவாய்ப்புகள் இன்றி அவர் இருந்தார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் ‛லியோ' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு நடிகை திரிஷா தொடர்பாக அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பின. அந்த பிரச்சனைகளை கடந்து வந்த மன்சூர் அலிகான் தற்போது லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். வேலூர் சிட்டிங் எம்பியும் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் பசுபதி, பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சியின் மகேஷ் ஆனந்த் ஆகியோரை எதிர்த்து மன்சூர் அலிகான் களமிறங்கி உள்ளார்.
மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வேலூர் தொகுதியில் முகாமிட்டு பலாப்பழம் சின்னத்துடன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து இன்று வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மன்சூர் அலிகான் தீவிர பிரசாரம் செய்தார்.
அதன்பிறகு மன்சூர் அலிகான் குடியாத்தத்துக்கு சென்றார். இந்த வேளையில் திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார். சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவான ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐசியூவில் மன்சூர் அலிகானை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். முதற்கட்ட தகவலின்படி கல்லீரல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் மன்சூர் அலிகான் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்கான சிகிச்சையை டாக்டர்கள் வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications