நீட் கீட்டுலாம் தூக்கி போடுங்க! நாடு முழுக்க தமிழக பாடத்திட்டம் கொண்டு வாங்க! மன்சூர் அலிகான் அதிரடி
சென்னை: நீட் கீட்டு எல்லாத்தையும் தூக்கி போடுங்க என்றும் தமிழ்நாட்டு பாடம்தான் நாடு முழுக்க வைக்க வேண்டும் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
நீட் எனும் தேசிய தகுதி தேர்வு கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை எழுதினால்தான் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கிறது. இந்த தேர்வை எழுத தற்போது நிறைய பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

இத்தனை கடினமான இந்த தேர்வை எழுதுவதில் அரசு பள்ளி மாணவர்கள், ஏழை எளிய மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். இதனால் அவர்களுடைய மருத்துவக் கனவு என்பது கானல் நீராகிவிடுகிறது. பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் செலவாகிறது.
இதனால் அரியலூர் அனிதா முதல் சென்னை சிட்லபாக்கம் ஜெகதீஸ்வரன் வரை இதுவரை 22 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் நன்கு படித்து பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த போதிலும் நீட் எனும் அரக்கனால் இவர்களது மருத்துவர் கனவு கலைந்து போன விரக்தியில் தங்கள் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்.
இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் அதிமுக ஆட்சி காலத்திலும் நீட் விலக்கு மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது போல் திமுக ஆட்சியிலும் இரு முறை நீட் விலக்கு மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது.
ஆனால் அதன் மீது இதுவரை ஆளுநரோ குடியரசுத் தலைவரோ ஒப்புதல் அளிக்காத நிலை உள்ளது. கடந்த முறை சென்னை ராஜ்பவனில் நடந்த எண்ணித் துணிக எனும் நிகழ்ச்சியில் தமிழகத்திற்கு எப்போது நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியோ அது போன்ற எந்த திட்டமும் இல்லை என திட்டவட்டமாக கூறியதுடன் நீட் விலக்கு மசோதாவுக்கு நான் கையெழுத்திட மாட்டேன் என சொல்லிவிட்டார்.
இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய மக்கள் போராட்டம் வெடிக்க வேண்டும் என்றும் இதை நீக்கும் முழு பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். இது தொடர்பாக திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் ஒரு நாள் உண்ணாரவிரத போராட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில் நீட் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சில விஷயங்களை கூறியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. அவர் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில் கார்பரேஷன் ஸ்கூலில் படித்த தமிழன்கள்தான் நிறைய சாதித்திருக்கிறார்கள். அப்ப நீட் கீட்டுலாம் தூக்கி போடுங்க. எந்த என்ட்ரன்ஸ் எக்ஸாமும் வைக்கக் கூடாது.
தமிழ்நாட்டு பாடநூல்தான் இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த வேண்டும். சில விஷயங்களை மாற்றிவிட்டு அவங்க சாதனை செய்த மாதிரி செய்றாங்க இல்லையா, அது அவங்களுக்கே கேவலமான விஷயம் என பதிலளித்தார். மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீது மிகக் கடும் விமர்சனங்களை நடிகர் மன்சூர் அலிகான் வைத்திருந்தார். மக்களுக்காக மத்திய அரசு என்ன செய்தது. இவ்வாறு மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications