மாமா மகளையே மணம் முடித்த மாரிமுத்து! இதுவரை ஒரு முழம் பூ கூட வாங்கிக் கொடுத்ததில்லை!
சென்னை: குணசித்திர நடிகர் மாரிமுத்து காலமாகிவிட்ட நிலையில் அவர் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் பல வெளிவரத் தொடங்கியுள்ளன.
தேனி மாவட்டம் பசுமலையை சேர்ந்த மாரிமுத்து, உதவி இயக்குநராக பணியாற்றத் தொடங்கிய ஆரம்பக்காலத்தில் வெளியே யாரும் அவருக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை. இதனால் சொந்தத்திற்குள்ளேயே பெண் பார்க்கும் படலத்தை தொடங்கியிருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர்.

அந்த வகையில் போடியில் உள்ள தனது மாமா மகளையே மணம் முடித்துக்கொண்டார் மாரிமுத்து. பாக்கியலட்சுமி என்ற பெயரை செல்லமாக மலர் என்று மாற்றி தனது மனைவியை அழைத்து வந்தார் மாரிமுத்து. திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மனைவிக்கு ஒரு முழம் பூ கூட மாரிமுத்து வாங்கிக் கொடுத்ததில்லை.
அந்தளவுக்கு குடும்பம், மனைவி, பிள்ளைகள் என யாரைப்பற்றியும் சிந்திக்காமல் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என ஓடிக் கொண்டிருந்திருக்கிறார். அதேபோல் மனைவி மலருடன் ஒரு நாள் கூட சேர்ந்தவாறு கோவிலுக்கு செல்லாதவர் மாரிமுத்து. தாம் ஒரு பகுத்தறிவாதி என்ற போதிலும், தனது மனைவியை கோவிலுக்கு செல்ல வேண்டாம் எனக் கூறாதவர்.
அதேபோல் தனது இரண்டு பிள்ளைகளையும் மாரிமுத்து ஒரு நாள் கூட அடித்ததில்லை. மிரட்டலிலேயே அவர்களை ஒழுங்குப்படுத்தி விடுவார். ஆரம்பக்காலங்களில் ஹோட்டல் சாப்பாடு உட்பட எதுவாகினும் உண்டு வந்த மாரிமுத்துவுக்கு கடந்த 5 ஆண்டுகளாகவே வீட்டுச் சாப்பாடு தான் எல்லாமே. அந்தளவுக்கு தனது உடல்நிலையை கண்காணித்து கவனிக்கத் தொடங்கினார்.
ஆனாலும் இயற்கை இன்று இவ்வுலகை விட்டு மாரிமுத்துவை பிரித்துவிட்டது. இதனால் அவரது ரசிகர்கள் சொல்லொணாத் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications