நெகிழ்ந்துபோன ரஜினி.. உடல்நலம் பெற வேண்டி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!
சென்னை: நான் மருத்துவமனையில் இருக்கும்போது, நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அன்பு நண்பர்களுக்கும், நல விரும்பிகளுக்கும் மனமார்ந்த நன்றி என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் டாப் நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழகம் மட்டும் இன்றி இந்திய அளவிலும் பிரபல நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகாரஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். விசாகப்பட்டினத்தில் படப்படிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் தான் கடந்த 30 ஆம் தேதி இரவு நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமானப் பிரச்னை காரணமாக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் ரஜினியின் உடல்நிலை குறித்து அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை. பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ரஜினி விரைவில் நலம் பெற வேண்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்வதாக எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்தனர். இதய நோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் சாய் சதீஷ் தலைமையிலான மருத்துவ குழு ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளித்தது. இதய குழாய் ரத்த நாளங்கள் சீராக உள்ளதா? என்பது குறித்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மருத்துவ பரிசோதனையில், இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லும் தமனியில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரஜினியின் உசல்நலம் குறித்து அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், ரஜினியின் இதயத்தில் இருந்து பிரிவும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் வகையில் அந்த இடத்தில் ஸ்டன்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார் என்று கடந்த 1 ஆம் தேதி குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், ரஜினிகாந்த் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். ரஜினிகாந்த் தான் குணமடைய வேண்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “நான் மருத்துவமனையில் இருக்கும்போது, நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அன்பு நண்பர்களுக்கும், நல விரும்பிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நான் நலம் பெற பிரார்த்தனை செய்த மனதார வாழ்த்திய, என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமிதாப் பச்சன் என அனைவருக்கும் தனித்தனியே தனது எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications