"என் போட்டோவை வைத்து.. பல கதை சொல்லி ஏமாற்ற முயல்வார்கள்.. ஜாக்கிரதை!" நடிகர் ராஜ்கிரண் எச்சரிக்கை
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான ராஜ்கிரண் தனது பேஸ்புக் பக்கத்தில் பரபர போஸ்ட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதாவது தனது போட்டோவை காட்டி, ஒருவர் ஏமாற்ற முயல்வதாகவும் இதனால் ஜாக்கிரதையாக இருக்கும்படியும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், ஒரு நடிகர் என்ற முறையில் தன்னுடன் பலரும் போட்டோ எடுப்பார்கள் என்பதால் கவனமாக இருக்கும்படியும் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் மூத்த நடிகர்களில் ஒருவர் ராஜ் கிரண்.. தயாரிப்பாளராகத் தமிழ் சினிமா உலகிற்கு வந்த இவர், கஸ்தூரி ராஜா, வடிவேலு உள்ளிட்ட பலரைத் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

நடிகர் ராஜ்கிரண்:
தயாரிப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தமிழ் சினிமாவில் பெரும் முத்திரையைப் பதித்தவர் ராஜ்கிரண். என் ராசாவின் மனசிலே படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர், அதன் பிறகு பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். அந்த காலகட்டத்தில் மட்டுமின்றி இப்போதும் கூட டிரெண்டிற்கு ஏற்றபடி ஜூனியர் ஹீரோக்களுடன் சேர்ந்த ரஜினி முருகன், ப. பாண்டி உள்ளிட்ட படங்களில் கலக்கி வருபவர் ராஜ் கிரண்.
இவர் இப்போது தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள போஸ்ட் தான் பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக இருக்கிறது. தன்னுடன் இருக்கும் போட்டோவை காட்டி, பல கதைகளைச் சொல்லி ஒருவர் ஏமாற்ற முயல்வதாகவும் நடிகர் என்ற முறையில் தன்னுடன் பலரும் போட்டோ எடுப்பார்கள் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கும்படியும் அவர் பதிவிட்டுள்ளார்.
எச்சரிக்கை:
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "நான் ஒரு நடிகன் என்பதால், என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக என்று சிலரும், என்னை வைத்து திரைப்படம் இயக்குவதற்காக என்று சிலரும், என் அபிமானிகள் என்றும், என் தீவிர ரசிகர்கள் என்று பலரும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதென்பது, சாதாரணமாக நடக்கும் விசயம். இம்மாதிரியான புகைப்படங்களை வைத்துக்கொண்டு, என் சொந்தக்காரர்கள் என்றோ, எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு, யார் என்ன காரணத்திற்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் மிக கவனமாக இருங்கள்.
"கனடா செல்வம்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, என்னை வைத்து படம் தயாரிப்பதெற்கென்று, ஒரு சிபாரிசு மூலம் என்னிடம் வந்து பேசி, என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்ற ஒரு நபர், அதன் பிறகு என்னை சந்திக்கவுமில்லை. படம் தயாரிக்கவும் இல்லை. இது நடந்து ஏழெட்டு வருடங்கள் ஆகிறது.
கதைகளைச் சொல்லி ஏமாற்ற முயல்வார்கள்:
அதே நபர் சமீபத்தில் தளபதி என்ற ஒரு தயாரிப்பாளர், இயக்குனரிடம், என்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக்காட்டி, தன் பெயரை "ஸ்டார்லின்" என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, ஏதோ ஒரு வகையில் அந்த தளபதி என்பவரை ஏமாற்ற முயன்றதாக என் காதுக்கு செய்திகள் வருகிறது... என்னிடம், யார் சிபாரிசும் எடுபடாது. என் விசயங்களில், நான் மட்டுமே முடிவெடுக்கிறேன். என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, கதைகள் பல சொல்லி, யாரும் யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காகவே, இந்தப்பதிவு" எனப் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த போஸ்ட் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு நெட்டிசன்களும் ராஜ்கிரணின் ரசிகர்களும் பல்வேறு விதமான கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். ராஜ்கிரணின் இந்த எச்சரிக்கை பதிவு குறித்து நீங்க என்ன சொல்றீங்க என்பதை கமெண்டில் சொல்லுங்க!












Click it and Unblock the Notifications