‛அவர் என் தம்பி தான்’.. மன்னிப்பு கோரிய சிவக்குமார்! சால்வை தந்த நபருடன் இணைந்து உருக்கமான வீடியோ
சென்னை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நிகழ்ச்சியில் சால்வையை தூக்கியெறிந்த சம்பவத்துக்கு நடிகர் சிவக்குமார் மன்னிப்பு கேட்டுள்ளார். தனக்கு சால்வை கொடுத்த நபருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகராக ஜொலித்தவர் சிவக்குமார். கதாநாயகன், குணச்சித்திர வேடங்களில் 100க்கும் அதிகமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவரது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர்.

இந்நிலையில் தான் அவ்வப்போது நடிகர் சிவக்குமார் சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதற்கு முன்பு பொது வெளியில் நடிகர் சிவக்குமாருடன் ரசிகர் ஒருவர் செல்போனில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது கோபமடைந்த சிவக்குமார் ரசிகரின் செல்போனை கீழே தட்டிவிட்டார்.
இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு சிவக்குமார் வருத்தம் தெரிவித்து அந்த நபருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்தார். அதன்பிறகு தற்போது அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ கருப்பையா எழுதிய "இப்படித்தான் உருவானேன்" நூல் வெளியிட்டு விழாவில் சிவக்குமார் பங்கேற்றார்.
இந்த விழாவில் சிவக்குமாருக்கு வயதான நபர் ஒருவர் சால்வை கொண்டு வந்து கொடுத்தார். தனது அன்பின் வெளிப்பாடாய் அவர் சிவக்குமாரிடம் சால்வையை வழங்கினார். இந்த சமயத்தில் கடும் கோபமடைந்த சால்வையை வெறுப்புடன் தூக்கி வீசி எறிந்தார். இதனால் அந்த நபர் மனம் உடைந்து போனார். இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.
இதனால் மீண்டும் சிவக்குமார் சர்ச்சையில் சிக்கினார். வலைதளங்களில் நடிகர் சிவக்குமாரின் செயலுக்கு அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தான் காரைக்குடி நிகழ்ச்சியில் சால்வையை தூக்கியெறிந்த நிகழ்வுக்கு நடிகர் சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.
அதாவது தனக்கு சால்வை தந்த நபரான கரீமுடன் இணைந்து சிவக்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில்,மீடியா நண்பர்களுக்கு வணக்கம். இப்போது காரைக்குடி சால்வை மேட்டரை பார்த்து இருப்பீர்கள். அவர் யாரோ எவரோ அல்ல. எனது தம்பி. 50 ஆண்டு கால நண்பர். 1971ல் மன்னார்குடியில் உள்ள நாடகத்துக்கு தலைமை தாங்க போய் இருந்தேன். 1974ல் எனது கல்யாணத்துக்கு வந்திருந்தார். அவரது கல்யாணத்தை நான் தான் செய்து வைத்தேன். இவரது கல்யாணத்தை மட்டும் நான் நடத்தி வைக்கவில்லை.
அவரது மகள் கல்யாணத்துக்கு போய் உள்ளேன். பேரன் கல்யாணத்துக்கும் போய் இருக்கிறேன். பொதுவாக நிகழ்ச்சிகளில் எனக்கு யாராவது சால்வை போர்த்த வந்தால் அதனை திருப்பி அவர்களுக்கே போர்த்தி விடுவேன். சால்வை போர்த்தும் பழக்கம் எனக்கு கிடையாது. நிகழ்ச்சியில் 7 முதல் 8 பேர் பேசிய நிலையில் கடைசியாக நான் பேசினேன். ரொம்ப சோர்வாக இருந்தது. கிளம்பி கீழே வந்தபோது எனக்கு சால்வை அணிவிப்பது பிடிக்காது என தெரிந்தே கரீம் கையில் சால்வை வைத்திருந்தார். தெரிந்து கொண்டே சால்வையை எடுத்து வந்தது அவரது தவறு. பொது இடத்தில் சால்வையை வாங்கி கீழே போட்டது என்ற முறையில் நான் செய்ததும் தப்புத்தான். I Feel Sorry.. அதற்காக நான் ரொம்ப வருத்தப்படுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications