கலைஞர்கள் வெயிலில் நின்று சாப்பிடுவதா? கண்சிவந்த விஜயகாந்த்.. உடனே செய்த சம்பவம்.. நெகிழ்ந்த சூரி
சென்னை: தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் நீங்கா புகழ் பெற்ற விஜயகாந்த் உயிரிழந்த நிலையில், அவர் குறித்த நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பேசிய நடிகர் சூரி, தான் கண்டு வியந்த விஜயகாந்த் குறித்து கூறியுள்ளார்.
திரை துறையில் சிறந்த நடிகராக மட்டுமல்லாது, சிறந்த எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். இவருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட மோதல் போக்கு, அதை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சரிவு, திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 2016ல் மக்கள் நல கூட்டணியில் நின்று தேர்தலில் தோல்வியுற்றது என அரசியல் வாழ்க்கையிலிருந்து ஒரு கட்டத்தில் அவர் முற்றிலுமாக வெளியேறினார். அரசியல் தோல்வி ஒருபுறம் எனில், உடலும் ஒத்துழைக்காமல் இழுக்கடித்தது.

வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று பார்த்தார். பெரிய அளவில் பலன் இல்லை. அதன்பிறகு நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி அறிக்கை வாயிலாக மட்டுமே அரசியல் செய்து வந்தார். வாய்ப்பிருக்கும்போது அவ்வப்போது கட்சி அலுவலகம் வந்து தொண்டர்களை சந்தித்து வந்தார். இப்படி இருக்கையில் கடந்த மாதம் 18ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல் நலம் குறித்து சலசலப்பு எழுந்தது.
ஆனால் அதையெல்லாம் முறியடித்து மீண்டு வந்தது, கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்களுக்கு உற்சாகமளித்தார். இருப்பினும் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனை என்று சொல்லப்பட்ட நிலையில், மருத்துவமனையிலிருந்து நெகட்டிவ்வான அறிக்கை வெளியானது.
அதாவது அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அதிலிருந்து அவரை மீட்க மருத்துவர்கள் போராடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று அதிகாலை அவர் உயிரிழந்துவிட்டதாக அறிக்கை வெளியானது. இதைகேட்டு தமிழகம் முழுவதும் ஏராளமான தொண்டர்கள் கதறி அழுதனர். விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரஜினி, கமல் என திரையுலகின் பெரும் நட்சத்திரங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பின்னர் பேசிய நடிகர் சூரி, தான் கண்டு வியந்த விஜயகாந்த் குறித்து நினைவு கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "படப்பிடிப்பு தளத்தில் எல்லோரையும் சமமாக பார்க்கக்கூடிய மனிதர். நான் பெரியண்ணன் படத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அது காடு. பெரும் பாறைகளை தவிர மரங்கள் ஏதும் பெரியதாக இல்லாத பொட்டல் காடு. மதியம் எல்லோரும் சாப்பிட கலைந்தோம்.

ஏராளமான ஜூனியர் நடிகர்கள் நிற்க நிழல் கூட இல்லாமல் நின்றுக்கொண்டிருந்தார்கள். இதை பார்த்த விஜயகாந்த், நிற்கவே நிழல் இல்லாதபோது எப்படி சாப்பிடுவார்கள் என்று கேள்வியெழுப்பினார். இடம் இல்லை. இருக்கிற இடத்திலேயே அப்படியே நின்று சாப்பிட்டுவிடுவார்கள் என்று சொல்லப்பட்டது. இதைக்கேட்டதும் கண் சிவந்த அவர், அதெல்லாம் முடியாது, உடனே சாமியானா போடு என்று தனது மேனேஜரை அழைத்து பந்தல் போட வைத்து சாப்பிட வைத்தவர்.
தவசி படத்திலும் அந்த மாதிரிதான். சிலர் படப்பிடிப்பை பார்ப்பதற்கு ஆர்வமுடன் வந்திருந்தனர். ஆனால் சத்தம் போட்டுக்கொண்டே இருந்தனர். இதனால் படப்பிடிப்பில் சலசலப்பு ஏற்பட்டது. கொஞ்சம் நேரம் வரை பார்த்த அவர், வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சென்று அவர்களை அமைதிப்படுத்தினார். பின்னர் படப்பிடிப்பு முடிந்தவுடன், அதுவரை வேடிக்கை பார்த்தவர்களை அழைத்து, அவர்களுக்கு கை கொடுத்து கலந்துரையாடினார். அவர்கள் புறப்பட தயாரானபோது சாப்பிட்டுவிட்டு போகுமாறு கூறினார்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications