அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு- நடிகர் சூர்யா வரவேற்பு
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ததற்கு தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார் நடிகர் சூர்யா. நீட் தேர்வுக்கு முதல் நாள் 3 மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் கொந்தளித்துப் போன நடிகர் சூர்யா, நீட் தேர்வுக்கு எதிராக கடுமையான அறிக்கையை வெளியிட்டார். நீட் தேர்வை மனுநீதி தேர்வு என்றும் சாடினார். அத்துடன் நீட் தேர்வை எழுத அனுமதித்த நீதிமன்றத்தையும் அதில் சுட்டிக்காட்டியிருந்தார் சூர்யா.
சூர்யா வில்லன் டாங்லி தோற்றார் போங்க.. சீன வீரர்களிடம் அருணாச்சல் இளைஞர் அனுபவித்த சித்ரவதை இது!.
நீட் அறிக்கையால் சர்ச்சை
சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அதே அளவுக்கு கடும் விமர்சனங்களும் எழுந்தன. நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி சுப்பிரமணியம் கடிதமும் அனுப்பியிருந்தார்.
நீதியரசர்கள் ஆதரவு
ஆனால் சூர்யாவுக்கு ஆதரவாக முன்னாள் நீதியரசர்களும், மூத்த வழக்கறிஞர்களும் ஆதரவாக இருந்தனர். அத்துடன் சூர்யா மீது மதுரை உள்ளிட்ட இடங்களில் போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக சூர்யாவின் ரசிகர்கள் விசித்திரமான போஸ்டர்களை ஒட்டினர்.
உள் ஒதுக்கீடு தீர்மானம்
இந்த நிலையில்தான் தமிழக சட்டசபையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றினார். இதனை வரவேற்று தமது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யா கருத்து வெளியிட்டுள்ளார்.
அரசுக்கும் கட்சிகளுக்கும் நன்றி
அதில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்... எனக் குறிப்பிட்டுள்ளார் சூர்யா.