நிஜ செங்கேணிக்கு சூர்யா சூப்பர் உதவி.. பழங்குடியினருக்கு புதிய திட்டம், இதுதான் உண்மையான 'ஜெய்பீம்'
சென்னை: போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்த ராஜா கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் பெயரில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணனுக்கு எழுதிய கடிதத்தில் குறவர் சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்கு உதவுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம் என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை நடிகர் சூர்யாவே தனது 2டி எண்டர்டெயிண்மெண்ட் சார்பில் தயாரித்துள்ளார்.
பிரதமர் மோடியின் ஜஸ்ட் 4 மணி நேர விசிட்..! ரூ.23 கோடி செலவிடும் மாநில அரசு!
இந்த பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
சூர்யா உதவி
விமர்சன ரீதியாக ஜெய்பீம் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சூர்யா திரைப்படத்தை வணிக நோக்கத்துடன் மட்டும் அணுகாமல், அதில் அவர் வைத்துள்ள கோரிக்கையான பழங்குடியினர் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்கான ஒரு கோடி ரூபாய் நிதியதவியை முதல்வரிடம் அளித்துள்ளார்.
சூர்யாவிடம் கோரிக்கை
இந்நிலையில் சமீபத்தில் 'ஜெய் பீம்' படத்துக்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்த ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவிக்கரம் நீட்டி ஆதரவளிக்க வேண்டுமென சூர்யாவிடம் கோரிக்க வைத்திருந்தார்.
சூர்யா அறிவிப்பு
அவரது கோரிக்கையை ஏற்று பார்வதி அம்மாள் பெயரில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணனுக்கு எழுதிய கடிதத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் சூர்யா கூறியுள்ளதாவது: வணக்கம். தங்களின் வாழ்த்து கடிதம் கிடைக்கப் பெற்றேன். 'ஜெய்பீம்' திரைப்படம் குறித்த உளப்பூர்வமான பாராட்டுக்கு மிக்க நன்றிகள். ஏழை எளிய மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது கம்யூனிஸ்ட் இயக்கமும், அந்த தத்துவத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டவர்களும் எப்போதும் துணை நிற்பதைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன்.
கம்யூனிஸ்ட் இயக்கம்
இவ்வழக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பை இயன்றவரையில் திரைப்படத்தில் முதன்மைப்படுத்தியிருக்கிறோம். நீதிபதி கே. சந்துரு மற்றும் நேர்மையான காவல்துறை உயரதிகாரி பெருமாள்சாமி ஆகியோரின் பங்களிப்பையும் பதிவு செய்திருக்கிறோம்.
வாரிசுகளுக்கு போகும்
மேலும் மறைந்த ராஜாகண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில் திரு. பார்வதி அம்மாள் அவர்களின் பெயரில் 'பத்து இலட்சம்' ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதம்தோறும் அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்துக்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய் சேரும்படி செய்யலாம்.
இருளர் இன மக்கள்
மேலும் குறவர் சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்கு உதவுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். கல்விதான் வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்துக்கு நிரந்தர தீர்வு. ஆக்வேதான் 'ஜெய் பீம்' திரைப்படத்தின் மூலம் இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்கு உதவி செய்தோம். மக்களின் மீதான தங்கள் இயக்கத்தின் அக்கறை மிகுந்த செயல்பாடுகளுக்கு மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய மக்கள் களப்பணி தொடர மனப்பூர்வமான வாழ்த்துகள்..." இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.